அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி தடை- எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவு!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்துள்ளது.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பாக பிளவுபட்டுள்ளது. சென்னையில் ஜூன் 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பங்கேற்றனர். ஆனால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்போது இபிஎஸ் தரப்பு தன்னிச்சையாக, ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தது. இதற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இருந்தபோதும் இபிஎஸ் தரப்பு திட்டமிட்டபடி ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. அதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
அதிமுக இபிஎஸ் தரப்பின் ஜூலை 11 பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். முந்தைய பொதுக்குழு நடைபெற்ற ஜூன் 23-ந் தேதியன்று அதிமுகவில் எந்த நிலைமை இருந்ததோ அதே நிலைமைதான் நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இபிஎஸ் தரப்பு கூட்டிய ஜூலை 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபப்ட்டதும் செல்ல என்ற நிலை ஏற்பட்டது.

ஓபிஎஸ் அப்பீல் மனு மீது விசாரணை
இருந்தபோதும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ணமுராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அரியமா சுந்தரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ரஞ்சித்குமார் ஆகியோர் ஆஜராகினர். ஓபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை என வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்றம் அதிரடி தடை
இந்த விசாரணையின் முடிவில், மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெறும் போது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அவசரம் காட்டுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக இடைக்கால தடை விதித்தனர். அத்துடன் இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இபிஎஸ்-க்கு பின்னடைவு
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் பின்னடைவாகும். அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை அடுத்த 3 மாதங்களுக்குள் நடத்தி அந்த பதவியில் அமர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி தரப்பின் வியூகம். தற்போது உச்சநீதிமன்றத்தின் தடையால் இந்த முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் யார் உண்மையான அதிமுக? அதிமுக யார் கையில் இருக்கிறது? என்கிற குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications