அமைச்சர் செந்தில் பாலாஜியின் ”ஒற்றை நம்பிக்கை”- உச்சநீதிமன்றத்தில் நாளை ஜாமீன் மனு மீது விசாரணை!
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்தார் என்பது வழக்கு. இந்த வழக்க்ல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். தமது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி ஜாமீன் கோரியிருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 18-ந் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், உடல்நலன் பாதிப்பை காரணமாக காட்டி இருப்பதை சென்னை உயர்நீதிமன்றம் விரிவாக ஆராயவில்லை. சகோதரர் அசோக் தலைமறைவாக இருப்பதை ஒரு காரணமாகவும் சுட்டிக் காட்டி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த காரணத்தை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மருத்துவமனை ஆவணங்கள் நாளை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதேநேரத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை மிக முக்கியமானதாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications