ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் விடக்கூடாது.. உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு
சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் 16ம் தேதி விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்.
Recommended Video
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் ஓட்டுப் போட்டனர். எனவே, இவர்களை தகுதி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
2017ல் முதல்வராக எடப்பாடியார் பதவி ஏற்றதும், பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
எடப்பாடி பழனிச்சாமி மீது அப்போது, அதிருப்தியில் இருந்தார் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். எனவே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு 10 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அரசு, நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எடுப்பார். அவருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கடந்த பிப்ரவரி 4ம் தேதி வழக்கை முடித்து வைத்தது.

சபாநாயகர் முடிவு
ஆனால், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரையிலோ அல்லது சபாநாயகர் முடிவெடுக்கும் வரையிலோ அந்த 11 எம்எல்ஏக்களும் சட்டசபையில் நுழைய தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தது.

தகுதி நீக்கம்
இந்த வழக்கு, வரும் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது. இதனால் மறுபடியும் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications