நீட் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை- வாய்தா கேட்காமல் தமிழக அரசு வாதாட இபிஎஸ் வேண்டுகோள்!
நீட் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை- வாய்தா கேட்காமல் தமிழக அரசு வாதாட இபிஎஸ் வேண்டுகோள்!
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை விரைந்து நடத்தி தமிழக மாணவர்களுக்கு விடியலைக் கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அரசால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அந்த வழக்கானது தாமாகவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக நாளை பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கையும் நடத்த மனமில்லாமல் திமுக அரசு வாய்தா கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் தரவரிசைப் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் வழக்கை நடத்தாமல் வாய்தா கேட்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழக மாணவர்களின் மேல் திமுக அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் எனவும் அதற்கான வழிமுறை தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது திமுக.
இந்த முறையாவது மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நீட் வழக்க்கை வெற்றிகரமாக நடத்தி, நீட் நுழைவுத் தேர்வு சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகளை போடுவதற்கு செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது நீட் வழக்குக்காக ஒதுக்கி தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications