98.5 % இங்கே.. 1.5 அங்கே.. எல்லாம் சாதகமாக வரும்.. திருப்புமுனை ஏற்பட போகுது.. செங்கோட்டையன் பரபர
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பெரும் திருப்பு முனையாக அமையும் என்றும், 98.5 சதவீதம் கட்சியினர் நம்மிடத்தில் தான் உள்ளனர். 1.5 சதவீதம் தான் அங்கே இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பும் நமக்கு சாதகமாகவே வரும் என்று செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

அதிமுகவில் இரு அணிகளும் போட்டி
மக்கள் நீதி மய்யம் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனினும், தனியாக வேட்பாளரை நிறுத்த போவது இல்லை என்றும் அதிமுகவிற்கே ஆதரவு அளிக்கப்படும் என்பதையும் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சூசகமாக கூறியிருக்கிறார். அதிமுக சார்பாக ஓ பன்னீர் செல்வமும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளிடம் ஆதரவை கோரி வருகிறார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை பல முனை போட்டி நிலவும் என்பதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று ஓ பன்னீர் செல்வம் கூறி வருகிறார். மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக வரும் எனவும் பெரும்பான்மை தங்களுக்கே இருப்பதால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று கூறி வருகின்றனர்.

செங்கோட்டையன் பேட்டி
இப்படி தேர்தல் களம் பரபரத்துக் கொண்டு இருக்கும் நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைத்து தேர்தல் பணியை விரைவு படுத்தியுள்ளது. இந்த நிலையில், கே.ஏ செங்கோட்டையன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேதல் திருப்பு முனையாக அமையும் என்று பேசினார். இது தொடர்பாக கே.ஏ செங்கோட்டையன் கூறியதாவது:

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில்
நாம் வெற்றி வாகை சூடுவோம். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் மனம் மாறியிருக்கிறார்கள். மக்கள் மனம் மாறியது மட்டும் இல்லை திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் எப்படி திருப்பு முனையை ஏற்படுத்தினாரே.. அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த பணியை இன்று நாம் ஆற்றப்போகிறோம்.

சின்னத்தை யாராலும் முடக்க முடியாது
எங்களை பொறுத்தவரை களத்தில் இறங்க போகிறோம். இறங்கியதற்கு பிறகுதான் எதிர்களத்தில் நிற்பவர்கள் தள்ளாட போகிறார்கள், பந்தாட போகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் காணப்போகிறார்கள். நீங்கள் கவலைப்பட தேவையில்லை. சிலர் போயிட்டாங்க.. வந்துட்டாங்க.. அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. 98.5 சதவீதம் கட்சியினர் நம்மிடத்தில் தான் உள்ளனர். 1.5 சதவீதம் அங்கே இருக்கிறது. எங்கே இருக்கும் இலை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வரப்போகிறது. இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications