வீல் சேரில் அழைத்து வந்து அரசியல் செய்வதா? இனியும் விஜயகாந்தை வதைக்காதீர்.. தயாரிப்பாளர் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த்தை இதற்கு மேலும் சிரமப்படுத்தாமல் பாதுகாத்து வைப்போம் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் காய்ச்சல், சளி, இருமல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு 20 நாட்களுக்கு மேல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனிடையே அவருக்கு செயற்கை சுவாசம், டிரக்கியாஸ்டமி சிகிச்சை என்றெல்லாம் பலர் வதந்திகளை பரப்பினர்.

Suresh Kamatchi concern about Vijayakanths healh condition

இதை மனைவி பிரேமலதா மறுத்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜயகாந்த் பூரண நலம் பெற்றுவிட்டதாக மருத்துவமனை நிர்வாக் கூறி அவர் வீடு திரும்பினார்.

இதையடுத்து 14 ஆம் தேதி தேமுதிக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருவேற்காட்டில் தொடங்கியது. இதில் விஜயகாந்த் கலந்து கொண்டார். வீல் சேரில் வந்த விஜயகாந்த், நாற்காலியில் உட்கார முடியாமல் தவித்தார். வானத்தை பார்த்தவாறே இருந்த அவரை பின்னால் நின்றிருந்தவர்கள் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா அறிவிக்கப்பட்டவுடன் அவர் எழுந்து நின்ற போது விஜயகாந்த் திடீரென சரிந்தார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் பிடித்துக் கொண்டனர். மொத்தத்தில் விஜயகாந்தை மிகவும் கஷ்டப்படுத்தியதாகவே பார்க்கப்பட்டது. மகளிர் அணியினரும் மெலிந்த உடல் தோற்றத்தில் இருந்த விஜயகாந்தை பார்த்து கண்ணீர் விட்டனர்.

விஜயகாந்தை கட்சி என்ற பெயரில் அவரது குடும்பத்தினர் கஷ்டப்படுத்துகிறார்கள் என நெட்டிசன்கள் கலங்கிய நிலையில் பசங்க பட இயக்குநர் பாண்டியராஜன் தனது சமூகவலைதள பக்கத்தில் உடல்நிலை சரியில்லாத நிலையில் விஜயகாந்த்தை சிரமப்படுத்த வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தனது பேஸ்புக் பக்கத்தில் கேப்டன்... ஆரம்பத்துல எந்தக் கப்பல்ல கேப்டனா இருந்தாரு விஜயகாந்துன்னு கிண்டல் பண்ணியவங்க... பின்னர்தான் புரிந்து கொண்டனர். அவர் சினிமாவில் சிதைந்து கிடந்த பல கப்பல்களை சரி செய்தவர் என்று. அதன்பிறகு கிண்டலடித்த அதே வாய்கள் கேப்டன் கேப்டன் என வாயாரக் கூப்பிடத் தொடங்கியது.

நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் போது அச்சங்கத்தை தலை தூக்கி நிறுத்தியவர் அவர். கலை நிகழ்ச்சியொன்றில் ரஜினி கமல் என நட்சத்திரப் பட்டாளங்களைக் கையாண்டு கடனையடைத்தவர். சொன்னதை செய்து காட்டுவதையே இலட்சியமாக வைத்திருந்தவர். நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில், வரிசையாக பேருந்துகள் அவர்களை ஏற்றிச் செல்ல வந்தபோது பல கலைஞர்கள் பஸ்ஸிலா? என தயங்கி நின்ற போது, ஒரு பேருந்திலிருந்து கையசைக்க "சூப்பர் ஸ்டாரே பேருந்தில்தான் போகிறாரா? நாமும் ஏறிக்கொள்வோம்" என பேருந்துகள் நிறைந்தன.

இதன்பின்னால் விஜயகாந்தின் அதிபுத்திசாலித்தனமும் நிறைந்திருந்தது என சொல்லக் கேள்வி. எல்லா நடிகர்களும் பேருந்தில் ஏறத் தயங்குவார்கள் என அறிந்திருந்த விஜயகாந்த் சூப்பர் ஸ்டாரிடம், " நீங்க முதல்ல பேருந்தில் ஏறிட்டா அப்புறம் அனைவரும் ஏறிடுவாங்க" என சொல்லியிருக்கிறார். "அதற்கென்ன ஏறிட்டாப் போச்சு" என தனக்கேயுரிய பாணியில் சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தவிர, நடிகர் சங்கத்தில் ஒரு நடிகர் மீதோ நடிகை மீதோ புகார் வந்தால் அழைத்து விசாரிப்பார். சம்பந்தப்பட்ட நடிகர் நடிகை மீது தவறு இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்டு சுமூகமாக அந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அனுப்பி வைப்பார். நடிகர் நடிகைகள் மீது தவறில்லை என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நடிகர் சங்கம் வந்துதான் தீர்வு காண வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக நிற்பார்.

தன் உடன் பிறந்த சகோதரர்களாய் ஒவ்வொரு உறுப்பினரையும் மதித்தவர். நல்ல மனிதன் என அனைவரிடமும் பெயரெடுத்தவர். படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் சமமான, தரமான உணவு... யார் வந்தாலும் அடைக்கலம் என தன்னிகரற்ற மனிதராய் விளங்கியவர் கேப்டன். எல்லோரும் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க மறுத்த போது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் எனவும், மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டவர்.

காவிரியில் நீர் தர கர்நாடகா மறுத்தபோது, அம்மாநிலத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவோம் என குரல் கொடுத்து நெய்வேலி போராட்டம் நடந்தது. அப்போது 5,000 நடிகர்களை ஒன்றுதிரட்டி போராடியவர். அரசியலுக்கு முழுக்க தகுதியான மனிதர்... தகுதியான நேரத்தில் களமிறங்கி அதில் தனது கணக்கை அட்டகாசமாகத் தொடங்கியவர் உடல் நலத்தை விட்டுவிட்டார்.

உடல் நலம் பேணாததற்கு அரசியலே மிக முக்கிய காரணமாகிவிட்டது. எனக்கெல்லாம் மாபெரும் நம்பிக்கை இருந்தது கேப்டன் பழையபடி சிங்கமாக கர்ஜிக்க வந்துவிடுவார் என்று. ஆனால் சமீபத்திய அவரது காணொளியைப் பார்த்தபோது கண்ணீர்தான் வந்தது. பாழாப்போன அரசியல் அவரை இப்படி நம்மை பார்க்க வைத்துவிட்டதே எனக் கலங்கிப் போனேன். தவிடு பொடியாக்கும் ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைப் போல இருந்தவரை வீல் சேரில் வைத்து அரசியல் செய்ய அழைத்து வந்த போது நெஞ்சே உடைந்துவிட்டது.

மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்? என குமைந்து போனேன். இந்த சமூகத்தோடு, அரசியல் எதிரிகளோடு, தன் உடல் நலத்தோடு எவ்வளவோ போராடிவிட்டார்! இன்னுமா போராட வேண்டும்? தான் எந்நிலையிலிருந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது சரியல்ல. இப்போதுதான் தலைமை மாறிவிட்டதே... இனியேனும் அவரை வதைக்காமல் பாதுகாத்து வைப்போம். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமோடு நம்மோடிருக்கட்டும் என்பதே என் ஒரே ஆசை. கேப்டன் உங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பல கோடி பேரில் நானும் ஒருவன். நலமே சூழ்க உம்மை. என்றும் மரியாதையுடன், சுரேஷ் காமாட்சி, இயக்குநர் / தயாரிப்பாளர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+