டுவிஸ்ட்! எடப்பாடியிடம் 10 கோடி.. செந்தில் பாலாஜியிடம் பேரம்! நிர்மல் குமார் மீது சூர்யா சிவா புகார்
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமியிடம் ரு.10 கோடி வாங்கியதாகவும், செந்தில் பாலாஜியிடம் பேரம் பேசியதாகவும் அக்கட்சியில் இருந்து விலகிய சூர்யா சிவா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். அண்ணாமலையை விமர்சனம் செய்தால் அதற்கு உண்டான பதிலடியை நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும் என அவர் எச்சரித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் இன்று பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். விலகலுக்கான காரணத்தை தெரிவித்து அவர் வெளியிட்ட கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்றும் அண்ணாமலையை 420 மலை எனவும் அவர் விமர்சித்து உள்ளார்.

வசூல் செய்வதே வேலை
கட்சியின் பெயரை வைத்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடாமல் வசூல் செய்வதை மட்டுமே வேலையாக வைத்திருந்த குமாரு அவர்களே. ஏதோ பிஜேபி IT விங் நீங்க மாநில தலைவர் ஆனதுக்கு அப்புறம்தான் சிறப்பாக செயல்படுவது போல பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிஜேபி ஐடி வின் வளர்ச்சிக்கு காரணம் பிஜேபியின் மாநில தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் அண்ணாமலை அவர்கள் மட்டுமே.

நாக்கில் நரம்பில்லை
நீங்கள் சொல்லும் காலகட்டம் 2019 பிறகு தான் பிஜேபியின் ஐடி விங் பலமாக செயல்படுகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. தலைவர் தங்களுக்கு கொடுத்த மரியாதையும் முக்கியத்துவத்தையும் மீறி தனிப்பட்ட முறையில் தங்களுக்கு உதவியது அனைத்தும் அனைவரும் அறிந்ததே. நாக்கில் நரம்பில்லை என்றாலும் கூட பரவாயில்லை. கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாத நபர் நீங்கள் என்பதை தற்போதாவது தலைவர் புரிந்து இருப்பார் என நம்புகிறேன்.

ரூ.10 கோடி கொடுத்த எடப்பாடி
கட்சியின் முக்கிய தகவல்களை வெளி ஊடகங்களுக்கு தருவது, தனியார் நிறுவனங்களில் கட்சி பெயரை பயன்படுத்தி வசூல் செய்வது மட்டுமே தாங்கள் பிஜேபிக்கு செய்த தியாகங்கள் குமாரு. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த 10 கோடி நிர்மல் குமாருக்கு கொடுத்தது அல்ல. பிஜேபியின் தலைவர் என்பதற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியிடம் பேரம்
சார் செந்தில் பாலாஜி அவர்கள் மீது நீங்கள் கொடுக்கும் வழக்குகளில் எல்லாம் கட்சி உங்களுக்குப் பின்புலமாக இருந்தாலும், தாங்கள் அவரிடம் பேரம் பேசிய விஷயமும் சேர்த்து சொல்லுங்க. நீங்கள் கட்சிக்காகவா செய்தீர்கள் அவரிடம் இருந்து பணம் பறிப்பதற்காக தானே செய்தீர்கள். மூன்று முறை கட்சி மாறியவருக்கு இது ஒன்றும் புதுசு இல்லை.

பதிலடியை சந்திக்கனும்
உங்கள் முடிவு உங்களுடன். ஆனால் நீங்கள் வாங்கிய பணத்திற்கு விசுவாசம் காட்டுவதற்காக எங்கள் தலைவரை விமர்சனம் செய்தால் அதற்கு உண்டான பதிலடியை நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்." என்று விமர்சித்து இருக்கிறார். சூர்யா சிவா - பாஜக சிறுபான்மை அணி தலைவர் டெய்சியை தகாத வார்த்தைகளில் பேசிய விவகாரத்தை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications