வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு 81% தமிழக மக்கள் ஆதரவு.. அதிரடியான சர்வே!
சென்னை: தமிழகத்தில் சுமார் 81 சதவீத மக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உள்ளது புதிய தலைமுறை நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம், விவசாயிகளை ஆதரிக்கிறோம் என்று 81.20 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் 130 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்
தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இந்த தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் மக்கள் குறிப்பாக மீடியாக்கள் ஒரு பிரச்சினையை மறந்து விட்டன. அதுதான் டெல்லி விவசாயிகள் போராட்டம். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 130 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஆதரவு
மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இது வரையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்துக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இது தவிர உலகம் முழுவதிலும் இருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவு குரல்கள் வந்தன. வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைத்து, இது குறித்து விவாதித்து முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு கூறுகிறது.
மக்கள்
ஆனால் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று விவசாயிகள் உறுதியாக உள்ளனர். தற்போது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு, விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளதா? எதிர்ப்பு உள்ளதா? என்பது குறித்து புதிய தலைமுறை சர்வே நடத்தியது.
81 சதவீதம் பேர் எதிர்ப்பு
அப்போது வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக 8.24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம், விவசாயிகளை ஆதரிக்கிறோம் என்று 81.20 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது தொடர்பாக கருத்து சொல்ல முடியாது என்று 6.61 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 3.95 சதவீதம் பேர் வேறு ஒரு கருத்தை முன் வைத்துள்ளனர். இதன் மூலம் தமிழக மக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது. மக்களின் இந்த முடிவு தேர்தலில் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.