"ஜெய்பீமில்" வன்னியர் வெறுப்பரசியல்!? உண்மையை திரிக்கலாமா? எழுத்தாளர் கண்மணி ஆதங்கம்!
ஜெய்பீம் படத்தின் சர்ச்சை காட்சிகள் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது
சென்னை: ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள், கடுமையான சர்ச்சைகள், கண்டனங்களுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. என்ன நடந்தது? என்ன காட்சி அது?
ஜெய்பீம் மக்களால் தூக்கி கொண்டாடப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.. சுருக்கமாக சொல்வதானால், எளிய மக்களுக்கான படம் இது..
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சுயநலமின்றி போராடி வரும் போராளிகளின் வாழ்க்கையை அப்பட்டமாக தெரிகிறது.
பாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு!
துயரம்
அனைத்தையும் இழந்த மக்களின் துயரத்திற்காக போராடும் நாயகனின் உறுதிப்பாடு மலைப்பை தருகிறது.. சமூக மாற்றத்தின் சாத்தியக்கூறுகளை அள்ளி தெளிக்கிறது இந்த படம்.. இந்திய ஜனநாயகத்தை வெட்கி தலைகுனிய வைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை நாடி நரம்புகளில் புகுந்து உணர வைக்கிறது.. நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்கையை எடுத்துக்கூறி, தன்னுடைய கடமையை சரிசெய்துள்ளது படக்குழு...
கொடுங்கோன்மை
வெகுஜன மக்களின் உரிமைகளுக்காகவும், கொடுங்கோன்மைக்கு எதிராக பொங்கியெழும் அவர்களின் போராட்டங்களுக்காகவும் வலிய குரல் கொடுக்க வேண்டும் என்பதுடன், அனைவருமே சேர்ந்து கைகளை உயர்த்தி ஆதரவு தர வேண்டும் என்ற கடமை உணர்ச்சியையும் இந்த படம் உணர்த்துகிறது. இப்படி பல வகைகளில் இந்த படம் நியாயம் செய்திருக்கிறது.. அதற்கான பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்று வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
Recommended Video
குற்றச்சாட்டுகள்
ஆனாலும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.. சாதீய ரீதியான குற்றச்சாட்டுகள் அதாவது சாதீய திணிப்புகள் இதில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, படத்தில் வரும் கொடூரமான காவல் அதிகாரி வீட்டில், வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் படம் உள்ள காலண்டர் மாட்டப்பட்டுள்ளது... அந்த கொடூர காவல் அதிகாரி வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை குறியீடாக காண்பித்திருக்கிறார் டைரக்டர் என்கிறார்கள்.
கதைக்களம்
நிஜத்தில் நடந்த கதையே படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.. அப்படியானால் அந்த காவல் அதிகாரி, வன்னியர் இனத்தவர் கிடையாது.. வேண்டுமென்றே அப்படி காண்பித்திருக்கிறார்கள் என்பதே அந்த குற்றச்சாட்டு... இப்படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வட்டராவழக்கு பேச்சுக்கு உதவியவர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்பவர்தான்.. அவர் தன்னுடைய பதிவில் இதை பற்றி விரிவாக சொல்வது என்னவென்றால்:
தயக்கம்
"படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் என் வீட்டுக்கு வந்தார். இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டாரமொழியில் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆகவே பிரிதியில் மாற்றித்தாருங்கள் என்றார். எனக்கு பரிச்சயமில்லாத துறையாக என்னைத்தேடி வந்ததால் தயக்கத்தோடு சம்மதித்தேன். எனக்கு காட்டப்பட்ட பிரதியில் படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய "எலிவேட்டை" என்றே இருந்தது. உரையாடல்களும் சற்றேறக்குறைய இப்பகுதியின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு சொன்னேன்.
விளம்பரம்
மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாக தெரியவில்லை. அந்த பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் சொன்னார். அந்த உரையாடல் தொடர்பான சிறு வேலைக்காக எனக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்தார்கள்.பிறகொருநாள் படம் திடுமென பெயர்மாற்றம் பெற்று "ஜெய்பீம்" என விளம்பரம் வந்தது. படத்தை பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தததை மகிழ்வோடு சொன்னார்கள்.
குறியீடு
கூடவே வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்கு தெரியாமல் இது நடந்திருக்காது என்பது மாதிரி தொடர்ந்து அழைப்புகள் விசாரிப்புகள். நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது இந்த படத்தில் வட்டார உரையாடல் தொடர்பாக மிக சொற்ப வேலையை மட்டுமே நான் செய்திருக்கிறேன். மேலும் என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் கலசம் போன்ற குறியீடுகளெல்லாம் அப்போது அதில் இல்லை. மீறி இருந்திருந்தால் நிகழ்விற்கு சற்றும் பொருத்தப்பாடு இல்லாத அந்த பகுதியை நீக்க சொல்லியிருப்பேன். அல்லது நான் விலகியிருப்பேன்.
வன்னியர்கள்
தற்கால அரசியல் சூழலை கருத்திற்கொண்டு படத்தின் வியாபாரம், விறுவிறுப்பிற்காக எல்லோரையும் போல நிகழ்விற்கு சற்றும் தொடர்பில்லாத வன்னியர் வெறுப்பு அரசியலை கையிலெடுத்திருக்கிறார் போலும். எல்லா சாதியிலும் மோடுமுட்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். வன்னியர்களிலும் அந்த ஆய்வாளர் போன்று இருக்கவும் கூடும். அதற்காக ஒரு சமூகத்தின் குறியீடான அக்கினிக் கலசத்தை பின்னணியில் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் வன்முறையாளராக கொலையாளியாக காட்ட முயல்வது மிக மோசமான மனநிலையே.
சர்ச்சை கருத்துகள்
இத்தனைக்கும் உண்மை நிகழ்வில் அந்த காவல் ஆய்வாளர் வன்னியரில்லையென ஆதாரத் தகவல்களோடு சொல்கிறார்கள். மனசாட்சியை முற்றும் அடகு வைத்துவிட்டு வேறொரு சமுதாயத்தை சேர்ந்தவர் செய்த கொலைக்கு வன்னியரை அடையாளம் காட்டியிருக்கிறார். படம் சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். முற்றும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்ட இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெருந்துயரை ரத்தமும் சதையுமாக சொல்கிறது என்கிறார்கள்.
வேலைவாய்ப்பு
அதேசமயம் தூக்கிவிட்டு ஈரக்குலையில் குத்தியது போன்று எனக்கு நன்றியும் தெரிவித்துவிட்டு இன்னமும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கிக்கிடந்து வன்முறையாளர்கள் என்கிற அவப்பெயரோடு கூடுதலாய் கொலையாளிகள் என எங்களை சித்தரிக்கிற தங்களின் (இயக்குநரின்) சராசரி செயலைத்தான் என்னால் அங்கீகரிக்க இயலவில்லை. எதிர்வரும் காலத்திலாவது சமாசம்பந்தமில்லாத வன்னியர் வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் படமெடுக்க எங்கள் குலதெய்வம் முதனை செம்பையனார் தங்களுக்கு அருள்புரிவாராக" என்று குறிப்பிட்டுள்ளார்..
நீக்கம்?
இதையடுத்து, கண்மணி குணசேகரன், இன்னொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், 'ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், குறிப்பிட்ட காட்சியில் வரும் காலண்டரை, கிராபிக்ஸ் மூலம் பக்தி பட காலண்டராக மாற்றிவிடுவதாக கூறினார்.. இதற்கு இரு நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்தார்" என பதிவிட்டுள்ளார்.