விசாரணையின் முடிவில் உண்மை நிச்சயம் வெளிவரும்... சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர் சந்திப்பு
சென்னை: சிபிசிஐடி விசாரணை முடியும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம். விசாரணையின் முடிவில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
Recommended Video
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். அதன்பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
டேராடூன் டு டெல்லி
இதனிடையே சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, டேராடூனில் உள்ள சிவசங்கரை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்தது. ஆனால் சிவசங்கர் பாபா டேராடூனில் இருந்து டெல்லிக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
காவலில் விசாரிக்க முடிவு
இதையடுத்து தனிப்படை போலீசார் சிவசங்கர் பாபவை டெல்லியில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இன்று சுஷில் ஹரி தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா-வை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து 15 நாள் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார்.
நிச்சயம் உண்மை வரும்
இந்த சூழலில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், சிபிசிஐடி விசாரணை முடியும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம். விசாரணையின் முடிவில் உண்மை நிச்சயம் வெளிவரும். பள்ளியில் வந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை அளித்துள்ளோம்.
தவறான தகவல்
சிவசங்கர் பாபாவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியதாக வந்த தகவல் தவறானது. சிவசங்கர் பாபா எங்கேயும் தப்பி ஓடவில்லை. சிவசங்கர் பாபாவுக்கு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்கு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைத்தோம்" இவ்வாறு கூறினார்கள்.