சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சு வலி.. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கார் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்குச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. தன்னுடைய வாகனத்தை எஸ்.பி அலுவலக போலீஸ் அதிகாரிகள் வாங்கிக் கொண்டதாக மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்திருந்தார்.

தான் நேர்மையாக பணிபுரிவதால் என் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்ற சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக அதிகமான வழக்குகள் பதிவு செய்துள்ளேன். இதில், சம்பந்தப்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளேன். எனவே, நான் நேர்மையானவன். இந்த விவகாரத்தில் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
மேலும். கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகிய உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அழுத்தம் தருகிறார். அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்கிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இவரின் புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேரிடம் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதற்கான உத்தரவில், 6 காரணங்களை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அரசு ஊழியருக்கான விதிகளை மீறி, உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் ஊடகங்களை சந்தித்ததாகவும், உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி என்கிற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளதோடு, பல நேரங்களில் ஒழுக்கமின்மையை வெளிப்படுத்தி உள்ளதால் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , டிஎஸ்பி சுந்தரேசன் திடீரென சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுந்தரேசனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications