மாணவர்களுக்கு ‘ஸ்வீட்’ நியூஸ்! ஆக.14ஆம் தேதி இனிப்பு பொங்கல்.. தமிழக அரசு உத்தரவு.. காரணம் இதுதான்!
சென்னை: வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பிறந்தநாள் அன்று மட்டுமின்றி இந்த ஆண்டு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதல்வர்கள் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசும் அரசாணை வெளியிட்டது. ஆனால், ஜூன் 3ஆம் தேதி கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், அன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கும் 54,439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 லட்சம் குழந்தைகளுக்கும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications