SMART CITY ஊழலை மூடி மறைக்கவே இந்த வேலை; போலீஸிடம் தாராளமாக புகார் தரலாம்; BJP மீது பாயும் திமுக MLA
சென்னை: சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழலை மூடி மறைக்க அதிமுகவும் பாஜகவும் கூட்டு வைத்து பிரச்சனையை திசை திருப்பி வருவதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை தி.நகர் பகுதி வியாபாரிகளிடம் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதியின் ஆட்கள் வசூல்வேட்டையில் ஈடுபடுவதாக பாஜக பரபரப்பு புகார் ஒன்றை முன் வைத்திருக்கிறது.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிட்ட நாம், குற்றஞ்சாட்டப்படும் தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியிடம் விளக்கம் அறிவதற்காக பேசினோம்.
அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு;

ஸ்மார்ட் சிட்டி
''தி.நகர் பகுதி வியாபாரிகளிடம் எனது பெயரை பயன்படுத்தி வசூல்வேட்டை நடத்தப்படுவதாக கூறுவது கற்பனையே தவிர உண்மையில்லை. திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய வழியில்லாமல் தவித்து வரும் பாஜக இது போன்ற பொய் தகவல்களை பிரசங்கம் செய்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழலை வெளிக்கொண்டு வருவோம் என எங்கள் தலைவர் கூறியுள்ள நிலையில், அதை மடைமாற்றும் நோக்கில் புதிய பிரச்சனைகளை உருவாக்குகின்றனர்.''

கூட்டு வைத்து
''அதிமுகவும் பாஜகவும் கூட்டு வைத்துக்கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழலை மூடி மறைக்க முயற்சிக்கிறது. அதனால் தான் ஆளுங்கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்து வருகின்றனர். தி.நகர் வியாபாரிகளிடம் எனது பெயரை கூறி வசூல் செய்வதாக கூறப்படுவது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு.''

புகார் தரலாம்
''எனது பெயரைக் கூறி பணம் கேட்பவர்கள் மீது தாராளமாக போலீஸில் புகார் அளிக்கலாம். கட்சி பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்குமாறு நானே காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளேன். அப்படியிருக்கும் போது நான் எதற்கு இது போன்ற கீழ்தரமான வேலைகளில் ஈடுபடப் போகிறேன். இது பிஸினஸ்ஜோன் சார், அப்படியெல்லாம் போய் யாரும் ஈஸியாக பணம் வசூலிக்கமுடியாது. தி.நகர் பகுதியில் நடக்காத ஒரு சம்பவத்தை நடப்பது போல் சித்தரித்து அதிமுகவும் பாஜகவும் பொய்ச்செய்திகளை பரப்பி வருகின்றன'' என தனது தரப்பு விளக்கத்தை ஜெ.கருணாநிதி ஒன் இந்தியா தமிழ் மூலம் பகிர்ந்துகொண்டார்.

2 முக்கியம்
தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அளித்த விளக்கத்தில் இரண்டு விவகாரங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஒன்று தனது பெயரைக் கூறிக்கொண்டு பணம் கேட்டு வருபவர்கள் மீது வியாபாரிகள் போலீஸில் புகார் அளிக்கலாம் என்பது, மற்றொன்று ஸ்மார்ட் சிட்டி ஊழலில் அதிமுக-பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கூட்டும் இருக்கிறது என்பதுமாகும்.












Click it and Unblock the Notifications