30 நிமிடம் இல்ல இனி 5 நிமிஷம் தான்! தி.நகரை டோட்டலாக மாற்றும் மேம்பாலம்.. எப்போ ரெடியாகுது தெரியுமா?
சென்னை: தி நகருடன் அண்ணா சாலையை இணைக்கும் தெற்கு உஸ்மான் ரோட்டு மேம்பால பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
சென்னையில் போக்குரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேம்பாலங்கள் கட்டுவது.. சாலைகளை மேம்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாத்தியப்படும் இடங்களில் சாலைகள் விரிவாக்கமும் செய்யப்பட்டு வருகிறது.

பொது போக்குவரத்தை ஊக்குவிப்பது.. சாலைகளில் பேருந்துகள் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக சாலைகளில் பஸ் நிறுத்தத்திற்கு தனி இடம் என பல்வேறு நடவடிக்கைகள் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான தி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது.
ரூ. 131 கோடி மதிப்பில்: தி நகரை பொறுத்தவரை சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியாக உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தி நகரில் உள்ள முக்கிய வணிக வீதிகளில் கூட்டம் அலைமோதும். திருவிழா கூட்டம் போல எங்கு பார்த்தாலும் இருக்கும். வாகன நெரிசல் பற்றி தனியாக சொல்லத் தேவையில்லை. இந்த நிலையில் தி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரூ. 131 கோடி மதிப்பில் இரும்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை - புர்கிட் சாலை மற்றும் மேட்லி சாலை சந்திப்பு; தெற்கு உஸ்மான் சாலை - தென் மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு; மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை டி -ஜங்ஷன் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைகிறது. இது அண்ணா சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பனகல் பார்க் சந்திப்பை சில நிமிடங்களில் கடக்க உதவும்.
5 நிமிடத்தில் கடக்கலாம்: உஸ்மான் சாலையில் இருக்கும் டிராபிக்கை தவிர்த்து சில நிமிடங்களில் சென்றுவிடலாம். நகரின் முதல் இரும்பு பாலமான அது 8.4 மீ அகலத்தைக் கொண்டிருக்கும்... சிஐடி நகர் மெயின் ரோட்டில் 140 மீட்டரிலும், உஸ்மான் சாலையில் 120 மீட்டரிலும் மேல் ஏறும் சாலை அமைக்கப்படுகிறது.இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் 30 நிமிடங்களில் கடக்க வேண்டிய தொலைவை 5 நிமிடத்தில் கடக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பாலம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட்டு விடும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். பாலத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தற்போது கான்கீரிட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தெற்கு உஸ்மான் சாலை: இந்த பணிகளை தரமாகவும் துரிதமாகவும் நிறைவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன்" என்றார். இந்த மேம்பாலத்தை ஏற்கனவே உள்ள உஸ்மான் ரோடு மேம்பாலத்துடன் இணைக்க உள்ளது. விவேக் ஜங்க்ஷனுக்கு முன்பாக இணைக்கபட இருக்கிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு அண்ணாசாலையில் இருந்து வரும் வாகன ஒட்டிகள் மேட்லி ஜங்கஷன் செல்லாமலே நேரடியாக தி.நகரை வந்தடைய முடியும்.
புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாநகாரட்சி கூறுகையில், “சென்னை தியாகராயர் நகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த: இந்த மேம்பாலமானது, தெற்கு உஸ்மான் சாலை - பா்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக் சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 1200 மீ. நீளம் மற்றும் 8.40 மீ. அகலத்திலும் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சி.ஐ.டி.நகா் பிரதான சாலையில் 140 மீ. உஸ்மான் சாலையில் ஏறுவதற்கும், 120 மீ. இறங்குவதற்கு, இருபுறமும் 4 மீ. மற்றும் இருமுனைகளிலும் 1.5 மீ. நடைபாதைகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications