சென்னை தி. நகர் மேம்பால பணிகளில் திடீர் சிக்கல்.. இதை எதிர்பார்க்கலையே! வெளியான முக்கிய தகவல்
சென்னை: சென்னையின் இதய பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரில் எப்போதுமே டிராபிக் அதிகமாகவே இருக்கும். சிஐடி நகர் முதல் தெற்கு உஸ்மான் சாலை வரையிலான மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மேம்பாலப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஷாப்பிங் என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது தியாகராய நகர் தான். தீபாவளி, பொங்கல் என்று இல்லை.. வீக் எண்ட் வந்தாலேயே பலரும் தியாகராய நகருக்குத் தான் ஷாப்பிங் செய்ய வருவார்கள்.

ரூ. 50 முதல் பல லட்சம் வரை என்ன பட்ஜெட்டாக இருந்தாலும் தியாகராய நகரில் உங்களால் பிடித்ததை வாங்க முடியும். இதுவே இதன் சிறப்பாகும். அதேநேரம் தியாகராய நகர் டிராபிக் தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டிராபிக்கில் நிற்காமல் தி. நகரை தாண்டி செல்லவே முடியாது என்ற சூழலே அங்கு நிலவுகிறது.
எப்போது முடியும்: இதைக் கருத்தில் கொண்டே தி.நகரில் சிஐடி நகர் முதல் தெற்கு உஸ்மான் சாலை வரையிலான 1.2 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மழை எதுவும் இல்லை என்றால் இந்த மேம்பால கட்டுமான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் மழையால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டால், பிப்ரவரி வரை பணிகள் நடக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். ரூ. 131 கோடி மதிப்பிலான கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலத்தை நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் தான் ஆய்வு செய்து இருந்தார். தி.நகரில் போக்குவரத்து நெரிசலைப் பிரச்சினையாக மாறும் நிலையில், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
மேம்பாலம்: சிஐடி நகர் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் தற்போதுள்ள வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் சுமார் 50 மீட்டர் வரை ரங்கநாதன் தெருவுக்கு அருகில் இடிக்கப்பட்டுள்ளது. சிஐடி நகர் முதல் பனகல் பூங்கா வரையிலான இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டு மேம்பாலங்களையும் இணைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என்று தெரிகிறது.
தற்போது வரை ஒன்பது தூண்கள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், மழைக்குப் பிறகு கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், சென்னையில் இப்போது கணேசபுரம், கொருக்குப்பேட்டை, நொளம்பூர் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில், அவை அனைத்தும் அடுத்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
சிக்கல்: கட்டுமான பணிகள் வேகமாகவே நடந்து வந்ததாகவும் மழை காரணமாகவே இப்போது அது தாமதமாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த கட்டுமான பணிகளால் வடக்கு உஸ்மான் சாலை மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இப்போது சிஐடி நகரில் இருந்து அண்ணா சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பனகல் பூங்காவில் வெங்கடனாராய சாலைக்கும், தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, சிஐடி நகர் மெயின் ரோடு வழியாக அண்ணாசாலைக்கும் திருப்பி விடப்படுகிறது.
இங்கு சாலைகள் குறுகலாக இருப்பதால் டிராபிக் ஏற்படுகிறது. இந்த பகுதியைக் கடக்கவே காலை மற்றும் மாலை நேரங்களில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆவதாக மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக வெங்கட்நாராயணா சாலையில் டிராபிக் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். மேம்பாலம் வந்துவிட்டால் ஒரு சில நிமிடங்களில் இந்த இடத்தை கடந்துவிடலாம் என்றும் இதனால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications