சென்னை மாதிரியே.. தாம்பரம் மாநகராட்சியிலும் இப்ப ஆரம்பிச்சிட்டாங்களே.. சூப்பர் முடிவு
சென்னை: தாம்பரம் மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் உரிமம் பெற இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. இனி விதிமுறைகளின்படி, தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், அதிகாரிகள் குழு ஆய்வு செய்து சான்றிதழ்களை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை போல் அதன் புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சியிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக தெருநாய் மற்றும் மாடுகளால் அதிகப்படியான சிக்கல்களை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சந்திக்கிறார்கள். இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி தங்கள் எல்லைக்குள் வசிக்கும் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்க இணையதளம் தொடங்கியுள்ளது.

நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை https://tcmcpublichealth.in என்ற இணையதளம் மூலம் பெறுமாறு தாம்பரம் மாநகராட்சி மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. தங்கள் வீடுகளில் செல்லப்பிராணி வளர்க்கும் அல்லது வளர்க்க விரும்பும் உரிமையாளர்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி தேதி என்று தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், அண்மையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் குழந்தை ஒன்றை நாய்கள் தாக்கியதை அடுத்து, செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, தேவையான அனைத்து விவரங்களையும் இணைத்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கும் பணியை தாம்பரம் மாநகராட்சி தற்போது தொடங்கியுள்ளது. அரசின் விதிமுறைகளின்படி, தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து சான்றிதழ்களை வழங்குவார்கள். உரிமங்கள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் மொத்தம் மூன்று விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) மையங்கள் இருக்கின்றன. இந்த மூன்று இடங்களும் சுகாதாரத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனகாபுத்தூர், பாரதிபுரம், குண்டுமேடு ஆகிய இடங்களில் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தாம்பரம் மாநகராட்சி சார்பில் 70 பிரிவுகளில் பிடிபட்ட 437 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு 3 மையங்களில் ரேபிஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டு, சில நாட்கள் பாலூட்டிய பின், அவை எங்கு வசித்தனவோ அந்த இடத்தில் விடப்படுகின்றன.
இதேபோல் தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட தெருக்களில் மாடுகள் கண்டபடி சுற்றித்திரிவதை தடுக்க, அந்த மாடுகளை பறிமுதல் செய்வதுடன், கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சாலைகளில் பிடிப்படும் மாடுகளை பராமரிக்க மாடம்பாக்கம் மற்றும் பெருங்களத்தூரில் இரண்டு கொட்டகைகளும், திருநீர்மலை சாலையில் ஏபிசி மையமும் கட்டப்பட்டு வருகிறது" இவ்வாறு அதிகாரி கூறினார்.












Click it and Unblock the Notifications