சென்னை புறநகர்.. தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரத்தில் இப்படி இறங்கிட்டாங்களே.. கேமராவை கூட காணோம்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில், சமீபகாலமாகவே திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது, பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது... இது குறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.
சென்னை புறநகரில், பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள ஊரக பகுதிகள், வெளியூர் மற்றும் வெளி மாநில மக்களின் குடியேற்றம் நாளுக்க நாள் அதிகரித்தபடியே உள்ளன. இதனால் இவையெல்லாமே நகர்ப் பகுதிகளாக அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன.

குற்றங்கள் அதிகரிப்பு: அதற்கேற்ப, திருட்டு, வழிப்பறி, செயின் மற்றும் மொபைல் போன் பறிப்பு உட்பட, குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சமீபத்தில்கூட, தாம்பரம், சேலையூர் காவல் சரகங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், வீடு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் போன்றவை அதிகரித்து காணப்பட்டன..
வீடு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து, பீர்க்கன்காரணை, சேலையூர், சிட்லபாக்கம், தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.. இவைகளில் பெரும்பாலான சம்பவங்களில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் காட்சிகள் பதிவாகும் கருவிகளையும் சேர்த்தே கொள்ளையர்கள் திருடி சென்றுவிடுவதால், போலீசார் துப்பு கிடைக்காமல் திணறும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.
பெருங்களத்தூர்: கடந்த வாரத்தில்கூட, பம்மல் நாகல்கேணி மற்றும் புதுபெருங்களத்தூரில் 2 வீடுகளின் கதவை உடைத்து 24 சவரன் நகை மற்றும் ரூ.1.27 லட்சத்தை கொள்ளையர்களை திருடிச் சென்றிருக்கிறார்கள். பம்மல் நாகல்கேணி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாரதா.. 58 வயதாகிறது.. இவர் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார் சாரதா.
விருந்தை முடித்து விட்டு மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு தன்னுடைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகைகள் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ந்தார். ஆனால், வீட்டின் கதவு, ஜன்னல்கள் எதுவுமே உடைக்கப்படாமல் இருந்ததாம். .
சிசிடிவி கேமரா: இது குறித்து சங்கர் நகர் போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிகொண்டிருக்கிறார்கள்.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்..
வழக்கமாக வெளியில் செல்லும்போதெல்லாம், சாரதா வீட்டு சாவியை, அருகில் மறைத்து வைத்துவிட்டு செல்வாராம்.. இதைதான் மர்ம நபர்கள் நோட்டமிட்டு, சாவியை எடுத்து நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.
அதேபோல, பெருங்களத்தூர் சிதம்பரநாதன் தெருவில் 67 வயதுடைய பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு, மறுநாள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு வீடு திரும்பி வந்துள்ளார்.
விசாரணை: அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 9 சவரன் நகை, ரூ1.27 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பீர்க்கன்கரணை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.. இப்படி சென்னையின் புறநகர் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது, பொதுமக்களை கலக்கமடைய செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications