'கூண்டோடு மாத்திடுவேன்..' பெண்ணை அலைக்கழித்த போலீஸ்.. வாக்கி டாக்கியில் வந்து அலறவிட்ட ஆணையர் ரவி
சென்னை: புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தாம்பரம் காவல் ஆணையர் ரவி போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களாகச் செயல்பட்டு வருகிறது. இதில், தாம்பரம் காவல் ஆணையராக ரவி பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் பள்ளிக்கரணை பகுதியில் மனைவியைக் கணவன் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடவடிக்கை இல்லை
ஆனால், இது தொடர்பான புகாரை காவல்துறையினர் முறையாக வாங்கவில்லை என்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் 4 முறை புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, நடவடிக்கை எடுக்காத போலீசாரை வாக்கி டாக்கி மூலம் கடுமையாக எச்சரித்தார்.

கன்னியாகுமரிக்கு மாற்றி விடுவேன்
தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், "கணவன் அடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 முறை புகார் கொடுக்க அந்த பெண் வந்து செல்கிறார். பள்ளிக்கரணை போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரை கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மாற்றி விடுவேன்.

கூண்டோடு காலி பண்ணிவிடுவேன்
தனுஷ்கோடியில் போய் அலையை எண்ணிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளி விடுவேன். சரியாக நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கக் கூடாது. வெட்டித்தனமாக வேற வேலையை ஏதாவது பார்த்திட்டு இருந்தீங்கனா அவ்வளவு தான். கூண்டோடு காலி பண்ணிவிடுவேன். தாக்கப்பட்டது தொடர்பாகப் பெண் ஒருவர் புகார் கொடுக்க 4 முறை வருகிறார். ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் என்ன செய்றீங்க. போலீஸ் எதற்கு அங்கே இருக்கீங்க. காவலர்கள் பொதுமக்கள் சேவகர்கள் தானே. பொதுமக்களை துன்புறுத்தத்தான் இருக்கிறீர்களா?

மக்களை அலைக்கழிக்கக் கூடாது
இதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சைபர் கிரைம் தொடர்பாகப் புகார்கள் வந்தால் அந்தந்த காவல் நிலையங்களிலேயே புகாரைப் பெற்று சிஎஸ்ஆர் கொடுத்து விட வேண்டும். அதன் பிறகு வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். சைபர் கிரைம் புகார்களைத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கக்கூடாது. புகார் கொடுக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது. குறையோடு புகார் கொடுக்க வருபவர்களை உட்கார வைத்து புகாரைப் பெற்று அனுப்பி விடுங்கள். சரியாக பணியைச் செய்யுங்கள்.

மோசமான விளைவுகள்
முறையாகப் பணி செய்யாவிட்டால் சும்மா விடமாட்டேன் கூண்டோடு தூக்கி விடுவேன். அதன் பிறகு மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று அந்த ஆடியோவில் ஆணையர் ரவி எச்சரித்துள்ளார். இதன் பின்னர் சம்பந்தப்பட்ட காவலர்களும் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கி டாக்கி ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications