தாம்பரம் அருகே மது விற்பதை நிறுத்திய மாற்றுத்திறனாளி பெண்ணை நெகிழ வைத்த போலீஸ் .. குவியும் பாராட்டு
சென்னை: காவல்துறையின் அறிவுரையை ஏற்று கள்ளச்சந்தையில் மது விற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவர் சுரேசுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் போலீசார், ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்து நல்வாழ்வு அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.இதனை மணிமங்கலம் காவல் ஆய்வாளர் முன்னெடுத்துள்ளார். கணவருக்கு கிடைத்த பரிசால் கண்ணீர் மல்க மாற்றுத்திறனாளி பெண் நன்றி தெரிவித்தார்.இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள உள்ளது மணிமங்கலம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் நெசவுத் தொழிலாளியாவார். இவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.. இதனால் சுரேஷின் மனைவியான மாற்றுத்திறனாளி ஸ்டெல்லா மேரி, கள்ளச்சந்தையில் மதுவிற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்டெல்லா மீது மணிமங்கலம் போலீசார் ஆறு முறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே போதிய வருமானம் இன்றி வறுமையின் காரணமாக இப்படி கள்ளச்சந்தையில் மது விற்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் எடுத்த முயற்சியால், கடந்த 8 மாதங்களாக மாற்றுத்திறனாளியான ஸ்டெல்லா மேரி மது விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மணிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் அசோகன், 50000 ரூபாய் முன் பணமாக செலுத்தி, சுரேசுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தார். இதுபற்றி மாற்றுத்திறனாளி ஸ்டெல்லா மேரி கூறுகையில், நான் கடந்த நான்கு வருடங்களாக டாஸ்மாக் மதுக்கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் மதுவிற்று வந்தேன்.
என்னால் சுத்தமாக நடக்க முடியாது..இரண்டு கால்களும் வராது.. கையும் வராது.. எங்காவது செல்ல வேண்டும் என்றால்.. என்னை தூக்கி ஆட்டோவில் உட்கார வைத்துதான் கூட்டிச் செல்ல வேண்டும்... பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததுடன், இது எல்லாம் தவறு என்று அறிவுரை கூறினார். அதன்பிறகு போலீசாரும் வந்தார்கள். மது விற்க கூடாது என்று எச்சரித்து அறிவுரை கூறினார்கள்..
அதன்பிறகு மது விற்பதை நிறுத்திவிட்டேன்.. மதுசூதனன் என்ற காவலர் அழைத்து ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டார். அப்போது அவரிடம் எனக்கு எந்த ஒரு வருமானமும் இல்லாததால் இப்படி இருந்ததாக கூறினேன்.. அவர் என்னிடம் மது விற்க வேண்டாம். ஆட்டோ வாங்க உதவி செய்கிறோம் என்று கூறினார்.அதன் பிறகு சில நாட்கள் கழித்து மதுசூதனன் சாரும், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன் சாரும் என்னை காவல் நிலையம் வரச்சொன்னார்கள்.. கையில் 50000 கொடுத்து ஆட்டோவிற்கு கட்டுமாறு கூறினார்கள்.. அதன்படி கட்டினோம்.. அவர்கள் ஆட்டோவை நேரில் வந்து தந்தார்கள்.. சொன்ன மாதிரியே செய்து கொடுத்துள்ளார்கள்.. நான் இனி அந்த தவறை செய்ய மாட்டேன்" இவ்வாறு கண்ணீர்மல்க மேரி நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications