மெகா போக்குவரத்தாக மாறும் தாம்பரம் ரயில் நிலையம்! மெட்ரோ, புறநகர், விரைவு ரயில்கள் ஒரே இடத்தில்!
சென்னை: தாம்பரம் ரயில் நிலையம் 'மெகா' போக்குவரத்து மையமாக மாறுகிறது. அதாவது மெட்ரோ, புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் ஒரே இடத்தில் அமைகிறது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சென்னையின் முக்கிய புறநகர் பகுதியான தாம்பரத்தை, அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளும் சங்கமிக்கும் ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக (Integrated Mobility Hub) மாற்ற தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) திட்டமிட்டுள்ளன.
நான்கு சேவைகள் இணைப்பு
இந்தத் திட்டத்தின் மூலம் தாம்பரம் ரயில் நிலையத்தில் கீழ்க்கண்ட நான்கு முக்கிய சேவைகள் இணைக்கப்பட உள்ளன.
*வழக்கமான புறநகர் மின்சார ரயில்கள் (Suburban).
*நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்கள் (Express Trains).
*புதிதாக வரவுள்ள மெட்ரோ ரயில் சேவை (விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மற்றும் தாம்பரம் முதல் கிண்டி வரை).
*வரவேற்கப்படும் RRTS (Regional Rapid Transit System) எனப்படும் பிராந்திய விரைவு ரயில் (ஆலந்தூர் முதல் விழுப்புரம்/புதுச்சேரி வரை).
புதிய கட்டடங்கள்
ரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA), தாம்பரம் ரயில் நிலையத்தின் ஜி.எஸ்.டி சாலை (GST Road) மற்றும் சேலையூர் (Selaiyur) ஆகிய இரு பக்கங்களிலும் புதிய நவீன கட்டிடங்களை வடிவமைத்து வருகிறது.
அதிகாரிகள் ஆலோசனை
இதற்கான வரைபடத்தை இறுதி செய்ய, தெற்கு ரயில்வே, மெட்ரோ நிர்வாகம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும (CUMTA) அதிகாரிகள் கலந்து கொள்ளும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நவம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
பல்வேறு போக்குவரத்து அமைப்புகளை ஒரே இடத்தில் இணைப்பதன் மூலம், பயணிகள் சிரமமின்றி ஒரு சேவையிலிருந்து மற்றொன்றுக்கு (உதாரணமாக: ரயிலில் இருந்து மெட்ரோவிற்கு) மாறுவதை எளிதாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சென்னையின் போக்குவரத்து வளர்ச்சிக்கான ஒரு முன்னோடித் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒன் செயலி
சென்னையில் பரங்கிமலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையமும் மின்சார ரயில் நிலையமும் அருகருகே உள்ளன. அது போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பேருந்து நிலையம் இருக்கிறது.
பஸ், மெட்ரோ, ரயில் பயணத் திட்டத்தை ஒரே டிக்கெட்டில் செயல்படுத்த Chennai One என்ற புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்று' செல்போன் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த செயலி பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் டாக்சி, ஆட்டோக்களை ஒரே 'கியூ.ஆர்.' பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், யு.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications