திமுக இதுல எங்கே வந்தது? எடப்பாடி சொன்னதும்.. மறுத்த நீதிபதிகள்.. தமிழ் மொழியை பார்த்ததும் கமெண்ட்!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று திமுக பற்றியும் தமிழ் மொழி பற்றியும் விவாதங்கள் நடைபெற்றது.
அதிமுக பொதுக்குழு வழக்கு ஒருவழியாக முடிவிற்கு வருகிறது. ஆம்.. நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள்.. தமிழ் மெகா சீரியல் போல... தொடரும் போட்டு போட்டு இழுத்துக்கொண்டு இருந்த "பொதுக்குழு ஸ்டோர்ஸ்" சீரியல் இந்த வாரத்தோடு முற்றும் போட்டு முடிவிற்கு வருகிறதாம்!
இந்த அதிமுக பொதுக்குழு வழக்கை 1 வாரத்தில் விசாரித்து முடிக்க நினைக்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வாரமே விசாரணையை முடிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர். நாளை வரை மட்டுமே இந்த வாரம் விசாரணை நடக்கும் என்பதால் நாளையோடு வழக்கு விசாரணை முடிய உள்ளது.

தீர்ப்பு
அதிகபட்சம் தீர்ப்பு 15 நாட்களுக்குள் வர வேண்டும். ஆனால் எதாவது நடந்த தாமதம் ஆனால் கூட 40 நாட்களுக்கு மேல் ஆகாது. என்னவோ பொதுக்குழு வழக்கில் பெரும்பாலும் பிப்ரவரி இறுதியில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் நேற்று 3 சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன. முதல் சம்பவம் - அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டது தவறு என்று ஓபிஎஸ் வாதம் வைத்தார். இதற்கு நீதிபதிகள் இடைக்கால பொதுச்செயலாளர் தொண்டர்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டாரா? என்று கேட்டனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த பதிலில் இடைக்கால பொதுச்செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள்தான் இதில் வாக்களித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள்
அதனால் இந்த தேர்வு செல்லும் என்றார். இதற்கு ஓபிஎஸ் தரப்பு இல்லை.. தொண்டர்கள்தான் இடைக்கால பொதுச்செயலாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள் குறுக்கிட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டனர் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், நாங்கள் இருவரும் அந்த பதவிக்கு போட்டியிட்டோம். தொண்டர்கள் எங்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எங்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால் போட்டியின்றி நாங்கள் வெற்றிபெற்றோம் என்று ஓபிஎஸ் கூறினார்.

திமுக
இதில் நடந்த இரண்டாவது சம்பவம் - எடப்பாடி பழனிசாமி தரப்பை பார்த்து, ஏன் ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கினீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி தரப்பு ஓ பன்னீர்செல்வம் திமுகவிற்கு ஆதரவாக இருந்தார் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் யார் எந்த கட்சிக்கு ஆதரவாக இருந்தார். யார் எந்த கட்சிக்கு எதிராக இருந்தார் என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க மாட்டோம். கட்சி பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்றுதான் பார்ப்போம், என்று விளக்கம் அளித்தனர். அதோடு வழக்கு விசாரணையை இந்த வாதத்திற்குள் முடிக்க விரும்புவதாகவும் கூறினர். அதாவது திமுகவை ஓபிஎஸ் சப்போர்ட் செய்வதை எல்லாம் பற்றி கவலைப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ் மொழி
இதையடுத்து அதிமுக சட்ட விதிகள், பொதுக்குழு தீர்மானங்கள் பற்றிய விவரங்களை, கோப்புகளை தாக்கல் செய்ய நீதிபதிகள் குறிப்பிட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது கையில் இருந்த சில ஆவணங்களை தாக்கல் செய்தார். அதை பார்த்த நீதிபதிகள் இவை தமிழில் இருக்கின்றன என்று கூறினார். தொடர் பேசியவர் தமிழ் தனித்துவமான மொழி என்றும் கூறினார். தமிழ் எழுத்துக்களை பார்த்து அது தேவங்கிரி எழுத்துக்கள் போல இல்லாமல் தமிழ் எழுத்துரு கொண்டு இருந்ததால் இப்படி அவர் குறிப்பிட்டதாக தோன்றுகிறது. நீதிபதியின் இந்த கமெண்ட் நேற்று கோர்டில் கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications