இது தான் உங்க திராவிட மாடலா? இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கிறதோ? தமிழ் மாநில காங்கிரஸ் பாய்ச்சல்!
சென்னை: பால் விலையை உயர்த்துவது தான் திராவிட மாடலா என தமிழ் மாநில காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இன்னும் எத்தனை கொடுமைகளை "திராவிட மாடல்" அரசு செய்ய உள்ளதோ? என கடுமையாக வினவியுள்ளது.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
ஆவின் பால்.. வணிகரீதியாக வாங்குவோருக்கே விலை உயர்கிறது! சாமானியர்களுக்கு அதே ரேட்- அமைச்சர் விளக்கம்
மின் கட்டண உயர்வு
தேர்தலின் போது மாதந்தோறும் மின் கட்டணம் அளவிடும் முறையை அமல்படுத்துவோம் என்று கூறினார்கள் ஆனால் அதற்கு மாறாக மின்சார கட்டணத்தை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளார்கள். சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என அறிவித்தார்கள். ஆனால் சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தி மக்கள் மீது கூடுதல் வரி சுமையை ஏற்படுத்தியுள்ளார்கள்.
பால் விலை உயர்வு
அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ. 3 உயர்த்தியுள்ள தமிழக அரசு, நிறை கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 12 அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவுக்கு அதாவது 25% அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. டீ, காபி சாப்பிடலாம் என்று அடிப்படையில் ஏழை, எளிய மக்கள் சாதாரண டீ கடை வைத்திருப்போருக்கும் ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்குகின்றனர். இந்த பாலின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி இருப்பதன் மூலம் டீ மற்றும் காப்பி விலை மீண்டும் உயரக்கூடிய அபாய நிலையில் ஏழை எளிய மக்கள் பாதிப்படையக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
மறுபரிசீலனை
பால் என்பது மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவை. இதன் விலையை உயர்த்தி கொண்டே இருந்தால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவர். பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்களும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு என்பது தற்போதைய காலகட்டத்தில் உகந்ததாக இருக்காது என்பதால் அதனையும் மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 10 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முன் வர வேண்டும்.
கூட்டணிக் கட்சிகள்
சொந்த நலனுக்காக போராடும் கூட்டணி கட்சிகள் பொது மக்கள் நலனுக்காக ஆளும் அரசை எதிர்க்காதது ஏன்? திராவிட மாடல் அரசு நிர்வாகத்தில் தனது தோல்விகளை மறைப்பதற்காக ஆளுநரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. விடியாத அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் மக்கள் நலனுக்காக போராடுவதை விட்டு விட்டு ஆளுநரை மாற்றுவதற்கு கையெழுத்திட அறிவாலயம் செல்லும் கூட்டணி கட்சிகள்? பால் விலை உயர்வை பற்றி அக்கறை கொள்ளாதது ஏனோ?. இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.