இது நியாயம் இல்லைங்க! சிபிஎஸ்இ தேர்வு முடிவை ஏன் இன்னும் வெளியிடவில்லை? -தமிழ் மாநில காங்கிரஸ்
சென்னை: சிபிஎஸ்இ தேர்வு முடிவை ஏன் இன்னும் வெளியிடவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வினவியுள்ளது.
தேர்வு முடிவு காலதாமதம் செய்யப்படுவதால் கல்லூரிகளில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான வாய்ப்புகள் பறிபோவதாக வேதனை தெரிவித்துள்ளது.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
ஷின்சோ அபேவை கொன்றது ஜப்பானின் அக்னிபாத் வீரர்! பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்
சிபிஎஸ்இ தேர்வு
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் தமிழக பள்ளிக்கல்வித் துறையால் ஜூன் 20ஆம் தேதியே அறிவிக்கப்பட்டு விட்டன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிலும் சேர்ந்து வருகின்றனர்.
கல்லூரிகளில் சேர்க்கை
கல்லூரிகளில் சேர்க்கைக்கான அனுமதியும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான அனுமதியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு 2-ம் பருவ பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகி வருவதால் மாணவர்கள் எப்போது முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தேர்வு முடிவுகள்
எனவே மாநில வழி தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கான அனுமதி பெற்று வரும் வேளையில் சிபிஎஸ்இ மாணவர்கள் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்காகவும், கல்லூரி சேர்வதற்கான அனுமதிக்காகவும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். அவர்கள் இன்னும் தங்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாநில வழி கல்வியில் பயின்ற மாணவர்களே மிக அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.
வாய்ப்புகள் மிகவும் அரிது
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது. இதுபற்றி சிபிஎஸ்இ சரியான முடிவுகளை உடனடியாக எடுத்து மிக விரைவாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவித்து விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் வரும் காலங்களில் மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் போது சிபிஎஸ்இ திட்டத்தில் பயிலும் மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வந்தால் தான் சிபிஎஸ்இ மாணவர்களும் மாநிலக் வழி கல்வியில் பயிலும் மாணவர்களும் சிரமமின்றி பள்ளி கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை சரிசமமாக பெறுவார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.