தமிழ்நாடு எங்கே போகுது.. கடந்த தேர்தலை விட பறிமுதலான பணம், பொருட்கள் மதிப்பு 50% அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்த்தில் இருக்கும் இதேவேளையில் தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் இதர பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 2021 தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட மதிப்பை விட இந்த வருடம் 50 சதவீதம் கூடுதலாக பறக்கும் படை கைப்பற்றியுள்ளது.
பறக்கும் படையின் சோதனைகளும், நடவடிக்கைகளும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரிகளின் தகவலின்படி, தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், நகைகள், மதுபானங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.900 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் ரூ.126.64 கோடி ரொக்கம் ஆவணங்கள் இன்றி பிடிபட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்துவதன் விளைவாக அதிகப்படியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து 234 தொகுதிகளிலும் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2021 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பீடு
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப் பொருட்கள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்களின் மதிப்பு ரூ.446.28 கோடியாக இருந்தது. அதேபோல், கணக்கில் வராத ரொக்கம் ரூ.236.70 கோடி அளவுக்கு பிடிபட்டது. இவ்வாறு மொத்தம் ரூ.683 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய தேர்தலில் இந்த அளவு கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தேர்தலிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் எவ்வளவு தீவிரமடைந்து வருகின்றன என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நிலை
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை உரிய சரிபார்ப்புக்குப் பிறகு உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்படுகின்றன. 2021 தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 50 சதவீதத்துக்கு மேல் திருப்பி வழங்கப்பட்டது. இதில் ரூ.173.19 கோடி அளவுக்கு தங்கம் அடங்கும்.
தற்போதைய தேர்தலிலும் இதே போக்கு தொடர்கிறது. இதுவரை ரூ.400 கோடி அளவுக்கு ரொக்கம், விலைமதிப்புள்ள உலோகங்கள் மற்றும் பிற பொருட்கள் சரியான ஆதாரங்களுடன் சரிபார்க்கப்பட்டு உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் எந்த பொருளையும் திரும்பப் பெறலாம் என தெரிவித்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் விதிமுறைகள்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, ஆவணங்கள் இன்றி ரொக்கமாக ரூ.50,000 வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி உள்ளது. இதற்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும்.
ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு உரிய ரசீது அல்லது ஆதாரம் தேவை. வங்கிக் கணக்கு புத்தகம், ஏடிஎம் சீட்டு அல்லது வாங்கியதற்கான ரசீது போன்ற ஆவணங்கள் இருந்தால், அதிகாரிகள் சரிபார்த்து உடனடியாக திருப்பி அனுப்புவார்கள்.
ஆவணங்கள் இல்லையென்றால் அந்தப் பணம் மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்படும். ரூ.10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், வருமான வரி துறைக்கு தகவல் அளிக்கப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திரும்பப் பெறுவது எப்படி
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அல்லது பொருட்களை மீண்டும் பெற விரும்பினால், உரிய ஆவணங்களுடன் மாவட்ட அளவிலான கமிட்டியை அணுகி விசாரணையை தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறை எளிமையானது மற்றும் வெளிப்படையானது. இதன் மூலம் உண்மையான உரிமையாளர்கள் தங்கள் பொருட்களை இழக்காமல் திரும்பப் பெற முடியும். அதிகாரிகள் இந்த விதிமுறைகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து விளக்கி வருகின்றனர்.
பொதுமக்களே உஷார்
தேர்தல் காலத்தில் பயணம் செய்யும் போது அனைவரும் தங்கள் அடையாள அட்டையுடன், பணம் அல்லது பொருட்களுக்கான உரிய ஆதாரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். இது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள், தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த உதவுகின்றன. தமிழ்நாட்டில் தேர்தல் செயல்முறை தொடரும் நிலையில், இத்தகைய கண்காணிப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications