வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை... தமிழகம் 2-வது இடம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் என்ற தகவல் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பொய்மலை தகர்ந்துவிட்டதாக அவர் சாடியுள்ளார்.
வேலைவாய்ப்பு பெருகிவிட்டது, அந்நிய முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

தற்கொலை
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையை விட வேலையில்லாப் பட்டதாரிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இப்படி தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கேள்வி
தொழில் பெருகிவிட்டது, வேலைவாய்ப்பு பெருகிவிட்டது, அந்நிய முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என்ற எடப்பாடி அரசின் பொய் மலை தகர்ந்துவிட்டதாகவும், மத்திய அரசு விருது பெற்றதாக மகிழ்ந்த முதல்வர், மத்திய அரசின் இந்தப் புள்ளி விவரம் பார்த்து முகத்தை எந்தப் பக்கம் வைத்துக் கொள்வார்? என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார்.

முதலீட்டாளர்கள்
இதனிடையே மூதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் சந்திப்புகள் மூலம் தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டால் வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை விகிதம் கணிசமாக குறையக்கூடும்.

திறமை
பட்டதாரி என்ற ஒரு அடிப்படையை மட்டுமே வைத்து வேலை வழங்கும் நிலைமை இப்போது மாறியுள்ளது. ஒவ்வொரு பட்டதாரிக்கும் சுயதிறன் உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அலுவலக பணிகளாக இருந்தாலும் சரி வேலைவாய்ப்பு தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications