அம்பென வந்து விழுந்த கேள்விகள்.. சட்டப்பேரவையில் இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வரும் அதேசமயம், காரசாரமான விவாதங்களும் தினந்தோறும் அனலடித்து வருகின்றன. அந்தவகையில், இன்று முதல் அதாவது, மார்ச் 21-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், சட்டப்பேரவையில் விவாதங்கள் இன்று முதல் மேலும் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் பட்ஜெட்டை கடந்த 14ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து 2025-26 ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் மார்ச் 15 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்பார்த்ததை போலவே, எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பை கடுமையான விமர்சித்து வருகின்றன.. குறிப்பாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை எல்லாம் வெற்று அறிவிப்புகள் மட்டுமே என்றும், தேர்தலை ஒட்டிய பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் பட்ஜெட்டை விமர்சித்திருந்தனர். இதையடுத்து, மார்ச் 17ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் நடைபெற்று வருகிறது..
அந்தவகையில், நேற்றைய தினமும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. குறிப்பாக, சென்னை தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை காரணமாக அடிக்கடி போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார். மேலும், திருத்துறைப்பூண்டி முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
இந்நிலையில், இன்று முதல் அதாவது, மார்ச் 21-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்பட உள்ளது.. மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்தவகையில், ஏற்கனவே விவாதங்கள் அனலடித்து வரும்நிலையில், இன்றுமுதல் சட்டப்பேரவையில் அந்த விவாதங்களுக்கான பதிலுரை வரப்போவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications