சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - விசிக தேர்தல் அறிக்கை
சென்னை: சாதிமறுப்பு திருமணம் செய்த தம்பதியனரைப் பாதுகாக்க தனி காவல் பிரிவு உருவாக்க வலியுறுத்துவோம் எனவும்
சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் விடுதலை சிறுத்தைகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ளது. தேர்தல் வெற்றிக்காக சொந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார் திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தனி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று விழுப்புரத்தில் வெளியிட்டார்.

66 சதவிகித இட ஒதுக்கீடு
தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பாதுகாக்கப்படும். கல்வித்துறையை பொதுப் பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரிகளுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும். தமிழ் வழி மழலையர் வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும். மருத்துவம் ,பொறியியல் ,சட்டம், உயர்கல்வி படிப்புகள் தமிழ் வழியில் வழங்கப்படும்.

விவசாயப் பாடத்திட்டம்
புதிய வேளாண் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது தடுக்க போராட்டம் தொடரும். வேளாண்மையை மேம்படுத்த தனி வரவுசெலவுத் திட்டம். அனைத்து வகுப்புகளிலும் மாணவர்களுக்கு விவசாய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்

வெள்ளை அறிக்கை
100 நாள் வேலை வாய்ப்பை வேளாண்மைக்கும், சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கும் நீட்டிப்பு செய்து 200 நாளாக உயர்த்தவும்
மின் உற்பத்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, தமிழகத்தை மின் உபரி மாநிலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநங்கையர் நலன்
தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம். திருநங்கையருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பட்டியலின இடஒதுக்கீட்டை 2011 மக்கள்தொகை அடிப்படையில் 21 சதவிகிதமாக ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.

மீன்பிடி உரிமை
மீனவ மக்கள் மீன் பிடி தொழிலின் போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

7 பேர் விடுதலை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்ய வலியுறுத்துவோம். பெண்களுக்கு 33 விழுக்காடு அமல்படுத்தவும் பின்னர் அதை 50 விழுக்காடாக உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு வேலையில் முன்னுரிமை
சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை; தம்பதியனரைப் பாதுகாக்க தனி காவல் பிரிவு உருவாக்க வலியுறுத்துவோம் எனவும் விசிகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாகும்.