தேர்தல் ஜுரம் பத்திக்கிச்சு.. ஒட்டுமொத்தமாய் கூடும் ஆபிசர்ஸ்! தமிழகத்தில் தேர்தல் நடப்பது எப்போது?
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே இந்திய தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை வேகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உள்துறை செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய பார்வையாளர்களான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்தல் நடத்துவதற்கான நிர்வாக மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் மார்ச் மாதத்தில் நடுப்பகுதியில்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026
பொதுவாக, சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பாக, அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தயார் நிலையை மதிப்பீடு செய்ய தேர்தல் ஆணையம் இத்தகைய கூட்டங்களை நடத்துவது வழக்கம். அதன்படி, தமிழ்நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழல், தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையம்
தேர்தல் பாதுகாப்புக்காக எத்தனை கம்பெனி மத்திய ஆயுத காவல் படைகள் தேவை என்பதும், அவற்றை எவ்வாறு கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது என்பதும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. குறிப்பாக, பதட்டமான வாக்குச்சாவடிகள், முந்தைய தேர்தல்களில் வன்முறை சம்பவங்கள் நடந்த பகுதிகள், சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து விரிவான திட்டமிடல் செய்யப்படும்.
அதிகாரிகள் கூட்டம்
இதற்கிடையே, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அரசிடம் ஒப்படைக்கச் செய்வது, பழைய குற்றவாளிகள் மற்றும் தேர்தல் நேரத்தில் பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் மீது தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற விஷயங்களும் முக்கியமாக பேசப்படும். மாநில நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தயார் நிலை குறித்தும் தேர்தல் ஆணையம் விரிவாக ஆய்வு செய்ய உள்ளது.
தமிழக தேர்தல் முன்னேற்பாடுகள்
மேலும், வாக்காளர் பட்டியலின் தற்போதைய நிலை, புதிதாக சேர்க்கப்பட்ட பெயர்கள், நீக்கப்பட்ட பெயர்கள், புகார்கள் உள்ளனவா என்பதையும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கிறது. EVM மற்றும் VVPAT இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு, அவற்றின் பாதுகாப்பு, சேமிப்பு மையங்கள் குறித்த விவரங்களும் அதிகாரிகளிடமிருந்து பெறப்படும்.
தேர்தல் பாதுகாப்பு
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் பணம் அல்லது மது விநியோகம் நடைபெறாதவாறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த உள்ளது. இதற்காக மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்தல், வாகன சோதனைகளை தீவிரப்படுத்துதல், கண்காணிப்பு குழுக்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும்.
தேர்தல் தேதி எப்போது?
மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் 'கண் மற்றும் காதுகள்' போல செயல்படுவார்கள். அவர்கள் களத்தில் நேரடியாக ஆய்வு செய்து, நிலவரங்களை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள். அதேபோல், மாநில உள்துறை செயலாளர்கள் அந்தந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் காவல்துறை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாளர்களாக இருப்பதால், அவர்கள் அளிக்கும் அறிக்கைகளும் தேர்தல் ஆணையத்திற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, வரும் மார்ச்சில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications