தமிழக சட்டசபை தேர்தல்.. கடைசி நேர அறிவிப்பு.. இன்று ஓட்டு போடுறவங்க? இத கண்டிப்பா பாருங்க
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், முதல் முறை வாக்காளர்களும், பொதுமக்களும் வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு செல்லலாமா? வாக்களிக்க செல்லும் போது எதை எடுத்து செல்ல வேண்டும், வாக்களிப்பது எப்படி என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன. அவற்றிற்கான விடையை பாருங்கள்
1. செல்போன் கொண்டு செல்லலாமா?
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை.

வாக்குச்சாவடிக்கு வெளியே 100 மீட்டர் தொலைவு வரை செல்போன் பயன்படுத்தலாம். ஆனால், வாக்களிக்கும் அறைக்குள் (Polling Booth) செல்போன், கேமரா அல்லது எந்தவித மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது.
பெரும்பாலான மையங்களில் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கத் தற்காலிக இடங்கள் அல்லது டோக்கன் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். எனினும், பாதுகாப்பு கருதி செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வருவது அல்லது உடன் வருபவர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்வது சிறந்தது.
2. எதை எடுத்துச் செல்ல வேண்டும்? (அடையாள அட்டைகள்)
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அதைக் கொண்டு செல்லலாம். அது இல்லாத பட்சத்தில், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 12 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகக் காட்டலாம்:
ஆதார் கார்டு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை
புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள்
தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு
ஓட்டுநர் உரிமம்
பான் கார்டு
இந்திய கடவுச்சீட்டு
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
மத்திய/மாநில அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை
எம்.பி/எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை
குறிப்பு: உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். பூத் ஸ்லிப் என்பது தகவலுக்காக மட்டுமே, அது தனிப்பட்ட அடையாள ஆவணமாகக் கருதப்படாது.
3. வாக்களிக்கும் முறை
நீங்கள் வாக்குச்சாவடி சென்றதும் அங்கு வரிசையில் அமர்ந்து இருக்கும் முதல் அதிகாரி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, உங்கள் அடையாள அட்டையை உறுதி செய்வார்.
அடுத்ததாக இரண்டாம் அதிகாரி உங்கள் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைப்பார். பின்னர் ஒரு ரசீதில் கையெழுத்து அல்லது இடது கை கட்டைவிரல் ரேகையைப் பெற்றுக்கொண்டு, வாக்காளர் சீட்டு வழங்குவார்.
அடுத்து மூன்றாம் அதிகாரி அந்த சீட்டைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் வாக்களிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார் செய்வார்.
அப்போது நீங்கள் மறைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று, நீங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேரே உள்ள நீல நிறப் பொத்தானை அழுத்தவும். அப்போது ஒரு நீண்ட 'பீப்' ஒலி கேட்கும்.
இயந்திரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் VVPAT கருவியில், நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது ஒரு சீட்டாக 7 விநாடிகள் தெரியும். அது சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வெளியே வரலாம்.
காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. ஐந்து வருடம் ஒரு முறையே இந்த வாய்ப்பு வரும். எனவே ஜனநாயகக் கடமையைச் சரியாக ஆற்றி, உங்கள் வாக்கை உறுதி செய்யுங்கள்!












Click it and Unblock the Notifications