தமிழகத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து என்பது வதந்தி - 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு உறுதி
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை என்றும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தயாராக உள்ளன என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில் 6,183 பேர் ஆண்கள், 1,069 பேர் பெண்கள், மூன்று பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் மனு தாக்கல் செய்த 7,255 பேரில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இந்த தேர்தலில் அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள், குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறையில் ஆறு வேட்பாளர்கள் களம் காணுகிறார்கள். தேர்தல் திருவிழாவில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஆதார் அட்டை, பான் கார்ட், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம், வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்ட், மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட் (Smart card issued by RGI under NPR), எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகள் ஆகிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
இந்த தேர்தலை பொறுத்த வரை பல்வேறு வசதிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாற்றுத் திறனாளிகள் தங்கள் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான வசதிகளை பெற்று கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா தொடர்பாக சில தொகுதிகளில் தேர்தல் ரத்தாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகார்களால் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாகும் என்பது வதந்தியே. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தயாராக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.