ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏக்களான ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் தான் பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்டு சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் இந்த நோட்டீஸ் அனுப்பியதன் பின்னணி பற்றி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 47 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் 2 அணியாக பிரிந்தனர். எடப்பாடி பழனிச்சாமி அணி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாகவும் செயல்பட்டனர்.

சட்டசபையில் முதல்வர் விஜய் அரசின் மீதான மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக கொறடா உத்தரவை மீறி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் எஸ்பி வேலுமணி தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கோரப்பட்டதது. இதையடுத்து எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களில் 19 பேர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்ந்தனர். கொறடா உத்தரவை மீறி தவெகவை ஆதரித்ததற்கு மன்னிப்பு கடிதம் வழங்கினர். இதையடுத்து இரு புகார்களும் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து எஸ்பி வேலுமணி அணி மீதான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.
அதேவேளையில் விராலிமலை எம்எல்ஏவான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மயிலம் எம்எல்ஏவான மாஜி அமைச்சர் சிவி சண்முகம் இன்னும் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேரவில்லை. அவர்கள் தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அதிமுகவில் வென்று எம்எல்ஏவான ஜெயக்குமார் (பெருந்துறை சட்டசபை தொகுதி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதி), சத்தியபாமா (தாராபுரம் சட்டசபை தொகுதி), மரகதம் குமரவேல் (மதுராந்தம் சட்டசபை தொகுதி) ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தனர்.
இதனால் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்து இருந்தார். அதன்படி 4 பேருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் வழங்கி உள்ளார். கடந்த 9 ம் தேதி அனுப்பபபட்ட நோட்டீஸ்க்கு 7 நாளில் பதிலளிக்கும்படியு கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 16ம் தேதிக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
இதுபற்றி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறுகையில் ''எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேரிடம் விளக்கம் கேட்டு ஜூன் 9-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. அவர்கள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர், கொறடா தேர்வு ஆய்வில் உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு இதற்கான அறிவிப்பு வெளியாகும்'' என்றார்.












Click it and Unblock the Notifications