சபாநாயகர் அதிரடி.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு, அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விருத்தாச்சலம் தொகுதி, அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மற்றும் அறந்தாங்கி தொகுதி, ரத்தினசபாபதி ஆகியோர் அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, அதிமுக கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடம் இவர்கள் மூவரும் நெருக்கம் காட்டி வருவதாகவும், எடப்பாடி அரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் ராஜேந்திரன் குற்றம்சாட்டினார். அதற்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்களை சபாநாயகரிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் சமர்ப்பித்ததாக கூறப்பட்டது.
மேற்கண்ட 3 அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சபாநாயகரை, வலியுறுத்தியதாக ராஜேந்திரன் பின்னர் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் "உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய கூடாது" என்று விளக்கம் கேட்டு, தனித்தனியாக மூன்று எம்எல்ஏக்களுக்கும், சபாநாயகர் தனபால் இன்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொதுவாக இது போல விளக்கம் கேட்கும் நோட்டீசுக்கு, பதில் அளிக்க, 15 நாட்கள் கால அவகாசம் தரப்படும். ஆனால் இந்த விஷயத்தில் 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் அளிக்கும் பதில் திருப்தியளிக்கவில்லை என்றால், இவர்களை தகுதி நீக்கம் செய்யக் கூடிய அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
இதுகுறித்து எம்எல்ஏ பிரபு கூறுகையில், ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஊடகங்களில், தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் நோட்டீஸ் எனது கைக்கு கிடைக்கவில்லை. அமமுக என்பது, அதிமுகவின் ஒரு பிரிவாக இருந்தது. இப்போதுதான் தனி கட்சியாக செயல்படுகிறது. நான் இப்போது அமமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. நான் சசிகலா அணியில் இருக்கிறேன். ஆனால் அதிமுகதான் எனது கட்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
22 தொகுதிகளுக்கான, இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பாக, நடவடிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications