தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம்: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நாளை நிறைவேற்றம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் அனைத்தும் நாளைய சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடனான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், சட்டசபை மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். அப்படி ஆளுநர் மசோதாக்களை சட்டசபைக்கு திருப்பி அனுப்பினால் மீண்டும் சட்டசபையில் அம்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும் நிலையில் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கு விசாரணை வரும் 20-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களை திடீரென சட்டசபைக்கு திருப்பி அனுப்பி வைத்தார். சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா ஆகியவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை கூடுகிறது. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டசபையில் நாளை மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு இதனைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications