இன்று 2வது நாளாக கூடிய சட்டசபை.. முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்! சபை ஒத்திவைப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மீண்டும் கூடியது. நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடரில், உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில், 21 ஆம் தேதி (இன்று), முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20) நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் ஒலிக்கப்படாததால் உரையை வாசிக்காமல் சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியேறினார். பின்னர், ஆளுநரை உரையை அவர் படித்ததாக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரையை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார்.

பின்னர் சட்டப் பேரவையிலிருந்து அதிமுக, பாஜக, பாமக கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. அதன்பிறகு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்தக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சட்டப் பேரவை கூட்டத்தை ஜனவரி 24 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டம் முடிவு செய்துள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று முடிந்ததும், ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அதன் பின்னர் பேரவைத்தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தினசரி காலை 9.30 மணிக்கு பேரவை கூடும். 21 ஆம் தேதி (இன்று), முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்றார்.
பிரபல தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல், எம்.எல்.ஏ. பொன்னுசாமி ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன் பேரவை நிகழ்ச்சிகள் இன்று நிறைவு பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதன்படி, சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிரபல தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல், எம்.எல்.ஏ. பொன்னுசாமி ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்து முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் இன்றைய சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது.
அதைத்தொடர்ந்து நாளை 22 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும். வரும் 23 ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டு மிகைச் செலவுக்கான மானியக் கோரிக்கை, அவைக்கு அளிக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடர்ந்து நடைபெறும். இறுதி நாளான ஜனவரி 24 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார். மேலும், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் ஆய்வு செய்யப்படும், நிறைவேற்றப்படும்.












Click it and Unblock the Notifications