அதிகரித்த புக்கிங்.. கிடைத்தது ரெஸ்பான்ஸ்.. இன்று முதல் சென்னைக்கு கூடுதல் பஸ்களை இயக்க முடிவு
சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தினமும் முன்பதிவு செய்து வருவதால் இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகம் சார்பில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் இடையே நீண்ட தூர பேருந்து சேவை செயல்படுகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பேருந்து சேவை அதிக அளவில் உள்ளது. இதேபோல் கோவை உள்ளிட்டமேற்கு மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை சென்னையில் இருந்து அதிக அளவில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ஐந்து மாதங்களாக விரைவு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. ஆனால் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்க தொடங்கியதை அடுத்து விரைவு பேருந்துகள் முழு வீச்சில் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் இயங்காத காரணத்தால் மக்கள் அதிக அளவு அரசு பேருந்துகளில் பயணிக்க முன் பதிவு செய்கிறார்கள். இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது பற்றி போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், அரசு விரைவு பேருந்துகளில் கடந்த 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தினமும் 5 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள். தினமும் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்கிறார்கள். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications