பச்சைக்கொடி.. கட்சி கொடி ஏந்தி செல்லக்கூடாது.. நிபந்தனையுடன் பாஜகவின் பைக் பேரணிக்கு ஹைகோர்ட் அனுமதி
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன பேரணிக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி தந்துள்ளது... ஆனால், கட்சி கொடியை ஏந்தி செல்ல தடை விதிக்கப்படுவதாகவும, கட்சி கொடியை ஏந்தி சென்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பாஜக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் சுதந்திர தினம் நாளை 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது.. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த பைக் பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

பைக் பேரணி: எனவே, இந்த பைக் பேரணிக்கு அனுமதி கேட்டு அந்தந்த மாவட்ட போலீசில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார். பைக் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு பாஜக தாக்கல் செய்திருந்த இந்த மனுவை ஐகோர்ட்டு நேற்றைய தினம் அவசர வழக்காக ஏற்று விசாரித்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கும் வந்தது.
அனுமதி மறுப்பு: அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணிகள் காரணமாகவே, இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, யார் வேண்டுமானாலும் தேசிய கொடியை ஏந்திச் செல்லலாம்.. வேண்டுமானால் எந்தெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை காவல்துறை அறிந்து, அதற்கேற்ப வாகன நெரிசல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக பேரணிக்கு அனுமதி மறுக்க முடியாது" என்றார்..
அனுமதி கிடைக்குமா?: மேலும், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைய (இன்று) தினத்திற்கும் ஒத்திவைத்திருந்தார்.. இதையடுத்து, இது தொடர்பாக இன்று விசாரணை நடக்க உள்ளது. நாளை சுதந்திர தினம் என்பதால், இன்றே பைக் பேரணிக்கு அனுமதி கிடைத்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பு பாஜகவுக்குள் எழுந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், "அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பேரணி நடத்தப்படுகிறது. பொதுநல நோக்கம் இல்லை. மேலும், தேசிய கொடி விதிகளின் படி கொடியை அவமதிக்க கூடாது. கடந்த 2023 மத்திய உள்துறை அமைச்சகம் கொடியை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
பாதுகாப்பு: குடியரசுத்தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள் தவிர மற்றவர்களின் வாகனங்களில் தேசிய கொடியை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் வீடுகளில் கொடியை ஏற்றுவதற்கு தடை செய்ய முடியாது. பெரும்பாலான காவலர்கள் சுதிந்திர தின நிகழ்ச்சியில் இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.
பாஜக சார்பில், "இளைஞர்களிடையே சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வுக்காக பேரணி நடத்தப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசுக்கு எதிராக எந்த கோசமும் எழுப்பப்படாது" என தெரிவிக்கப்பட்டது.
தேசிய கொடி: இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "நடந்து செல்பவர்கள் கொடியை எடுத்து செல்ல தடை? சைக்கிளில் எடுத்து செல்ல தடை? இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்ல தடை? தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது?
சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசிய கொடியை கையில் ஏந்தி போராடினார். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொடியை எடுத்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கட்சி கொடிகள்: வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலையை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். தேசியக்கொடியை ஏந்தி செல்வதை தடுக்க கூடாது என காவல்துறை இயக்குநர் அறிவிக்க வேண்டும். கட்சி கொடியை ஏந்தி செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அவ்வாறு கட்சி கொடியை ஏந்தி சென்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். பேரணிக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எந்த பகுதியில் பேரணி நடத்தப்படுகிறது என தெரிவித்தால் மட்டும் போதும் என்ற நிபந்தனையின் படி பாஜக மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது












Click it and Unblock the Notifications