"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி !
சென்னை: தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியான நிலையில் அமர்பிரசாத் ரெட்டிக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவருக்கு நிச்சயம் ஒரு தொகுதியில் சீட் கிடைக்கும் என கருதி பிரச்சார வாகனத்தை ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கி வைத்திருந்தாராம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி நேற்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, இம்முறை கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளில் ஒன்றைக் குறிவைத்திருந்தார். ஆனால், அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் கோவை வடக்கு மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
மாற்றுத் தேர்வாக தலைமை முன்மொழிந்த மொடக்குறிச்சி தொகுதியை ஏற்க அண்ணாமலை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரதமர் மோடியின் கோவை வருகை ஆகியவற்றைப் புறக்கணித்த அண்ணாமலை, தற்போது வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெறவில்லை.
பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய முகங்கள்:
எல். முருகன்: அவிநாசி (தனி)
தமிழிசை சவுந்தரராஜன்: மயிலாப்பூர்
வானதி சீனிவாசன்: கோவை வடக்கு (கடந்த முறை கோவை தெற்கு)
நயினார் நாகேந்திரன்: சாத்தூர் (கடந்த முறை நெல்லை)
எம்.ஆர். காந்தி: நாகர்கோவில்
விஜயதாரணி: விளவங்கோடு
கிருத்திகா சிவக்குமார்: மொடக்குறிச்சி (சி. சரஸ்வதியின் மருமகள்)
அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்ட இளைய தலைமுறைத் தலைவர்களுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வேளச்சேரியில் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எஸ்.ஜி.சூர்யா இருந்தார். ஆனால் அந்த தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அது போல் துறைமுகம் தொகுதி வினோஜ் பி.செல்வத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த தொகுதியும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
அமர்பிரசாத் ரெட்டிக்கு தளி தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கப்படவில்லை. இத்தனைக்கும் அமர் பிரசாத் ரெட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பிரச்சார வாகனத்தை எல்லாம் வாங்கி வைத்துவிட்டாராம். தற்போது சீட் கிடைக்காததால் பெரும் வேதனையில் உள்ளாராம்.
வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன் மற்றும் எல். முருகன் ஆகியோரின் கை ஓங்கியிருப்பதாகவும், இதனால் அண்ணாமலை தரப்பு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டிய அண்ணாமலைக்கு நேர்ந்துள்ள இந்த நிலை, கட்சியில் அவரது பிடி தளர்ந்துவிட்டதையே காட்டுவதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications