‛420’ மலை.. பாஜகவில் விலகி விமர்சித்த நிர்மல் குமார்.. ‛சகோதரர்’ என கூலாக வாழ்த்து சொன்ன அண்ணாமலை!
சென்னை: தமிழ்நாடு பாஜக ஐடி விங்க் தலைவராக பொறுப்பு வகித்து வந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து இன்று திடீரென்று விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை 420 என குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் தான் அண்ணாமலை, சகோதரர் என சிடிஆர் நிர்மல் குமாரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை உள்ளார். இந்நிலையில் தான் சமீபகாலமாக பாஜகவில் இருந்து சிலர் விலகி வருகின்றனர். ஒரு கட்சியில் இருந்து தலைவர்கள், நிர்வாகிகள் விலகுவது பொதுவான ஒன்று தான். இருப்பினும் விலகும் நபர்கள் அனைவரும் அண்ணாமலை மீது குற்றம்சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் பாஜகவில் இருந்து மதுரை டாக்டர் சரவணன், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் விலகினர். இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் விலகி உள்ளார். நிர்மல் குமாரும் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இன்றுடன் விடைபெறுகிறேன்
இதுதொடர்பாக நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

பலர் தோல்வியுற்றோம்
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம்.

420 மலையாக
எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு 420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அண்ணாமலை வாழ்த்து
இந்நிலையில் தான் நிர்மல் குமார் ராஜினாமாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் அதற்கான காரணத்தை எழுதி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை டேக் செய்து அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‛‛அன்பு சகோதரர் நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்'' என தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார்
இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இந்த சம்பவம் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நிர்மல் குமார் அண்ணாமலை மீது கூறிய குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளன.












Click it and Unblock the Notifications