‛‛ரூ.1 கோடி நஷ்டஈடு’’.. திமுகவின் ஆர்எஸ் பாரதிக்கு பறந்த அண்ணாமலையின் நோட்டீஸ்.. ஏன் தெரியுமா?
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஏராளமானவர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதனால் 150க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக தற்போது வரை 63 பேர் வரை இறந்துள்ளனர். மேலும் 67 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் தான் கள்ளச்சாராய பலி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிமுக, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் திமுகவின் அமைப்பு செயலாளர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விஷயத்தில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலையின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
அதாவது புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டியில், ‛‛ விருப்ப ஓய்வில் சென்ற எஸ்பி மோகன்ராஜ், கள்ளச்சாராய நிகழ்வு தெரிந்துதான் சென்றதாக கூறுகிறார் அண்ணாமலை. ஆனால் அந்த எஸ்பியே ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். அதெல்லாம் பொய், நான் அப்படிப் போகவில்லை. எனது மகள் மற்றும் மருமகளுக்கு பிரசவம் பார்ப்பதற்காக விடுப்பு எடுத்து அமெரிக்காவுக்கு சென்றேன் என்று கூறியுள்ளார். இப்படி பொய் சொல்கிற மனிதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவர் எந்த காலத்தில் உண்மையை பேசி உள்ளார்?.
மேலும் விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு எழுந்திருக்கிறது'' என தெரிவித்தார். இந்நிலையில் தான் அண்ணாமலை சார்பில் அவரது வழக்கறிஞர் பால்கனகராஜ், ஆர்எஸ் பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ‛‛உண்மைக்கு புறம்பான, தவறான கருத்துக்களைக் கூறி, மக்கள் மத்தியில் அண்ணாமலையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications