திடீரென சாலையில் அமர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை.. 4 பிரிவுகளின் கீழ் பாய்ந்தது வழக்கு!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக கோரி தமிழக பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது அண்ணாமலை திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர், "மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டுள்ளீர்கள். எனக்கு இந்த தலைப்பே மிகவும் பிடித்துவிட்டது.

சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதே போல் அந்த கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், "இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார். இன்னும் ஒரு வார காலத்தில், அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?
செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று வரை சேகர்பாபு தனது பதவியிலிருந்து விலகாததால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.
அப்போது வள்ளுவர் கோட்டம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரமாக பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் முற்றுகை பேரணி நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications