“மோடி உரக்க பேசினா அமெரிக்காவே கேட்கும்” 2009ல் மட்டும் அவர் இருந்திருந்தா?அட்டாக் மோடில் அண்ணாமலை !
சென்னை : மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும் எனவும், இலங்கையில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில், இலங்கை இறுதி கட்ட போரின் போது நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பல முக்கிய அரசியல் கட்சியினர், அமைப்பினர் புறக்கணித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பழ நெடுமாறன் மற்றும் பல தமிழ் தேசியப் பற்றாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது இனப்படுகொலையில் உயிரிழந்த மக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாஜக அண்ணாமலை
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதால், பல தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். ஆனால் அவர்களும் பல்வேறு காலக்கட்டத்தில் இலங்கை மக்களுக்காக போராடியுள்ளனர். தமிழ்நாடு பாஜக வேண்டாத கட்சியாக, வேண்டாத கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் காலச் சக்கரத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் 2008ஆம் ஆண்டு மோடியை பிரதமராக மாற்ற வரம் கேட்டிருப்பேன். மோடி வைரம் என்று எனக்கு தெரியும், ஆனால் அவரைப் பற்றி யாரும் இங்கு பேசவில்லை.

அமெரிக்கா கேட்கும்
அதனால் நான் பேசவேண்டிய சூழல் உள்ளது. மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும். போர் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள். அந்த காலக் கட்டத்தில் இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது. இலங்கை பிரச்னைக்கான தீர்வை கொடுக்கின்ற ஒரே ஒரு மனிதர் நரேந்திர மோடியைத் தவிர யாரும் கிடையாது. பாஜக கட்சியை சேர்ந்தவன் என்று இதைக் கூறவில்லை. ஒரு மனிதனாக கூறுகிறேன்.

ஈழ தமிழர்கள் கோபம்
ஈழ தமிழ் மக்கள் இந்தியாவின்மீது கடும் கோபத்தில் இருந்தனர். 2009 போரில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு தராததால் நம்மை அவர்கள் நம்பாமல் இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. யாழ்ப்பாணக் கலாசார மையத்தை மோடி கட்டிக் கொடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில் மோடி சரியான வகையில் காய் நகர்த்தி வருகிறார். தனி ஈழம் உருவாக்கப்பட்டால் உலகத்தில் சிறிய நாடாக அதுதான் இருக்கும். இலங்கைக்கு இதுவரை 20,000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா உதவி செய்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கே
ஒரே ஒரு எம்.பியை வைத்துள்ள ரணில் விக்கிரமசிங்கே இலங்கையில் பிரதமராகியிருக்கிறார். இதுதான் இலங்கையின் தேர்தல், அரசியலமைப்பு. நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சாதாரணமானவர் கிடையாது. இலங்கையின் அரசியலை அக்குவேறு ஆணிவேராக படித்தவர். எல்லாவற்றிற்கும் மேல் ஜெய்சங்கர் ஒரு தமிழர், தேர்தல் நடத்துவதற்கு இலங்கையில் காகிதம் இல்லை." என பேசினார்.












Click it and Unblock the Notifications