திமுக எம்பிகள் மீதான வழக்கு..ஆளுநரிடம் முக்கிய கோரிக்கை வைத்த அண்ணாமலை.. முதல்வருக்கு புதிய தலைவலி?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை மற்றும் திமுக எம்பிகள் தொடர்புடைய வழக்குகளில் உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வென்ற திமுக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி ஆகியுள்ளது. இதுவரை திமுக ஆட்சியின் மீது பொதுமக்களுக்குப் பெரியளவில் அதிருப்தி எதுவும் எழவில்லை.
புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்
இன்று இதுவரை வெளியாகியுள்ள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளே அதற்குச் சாட்சி. குறிப்பாக முதல்வரின் நடவடிக்கை ஒவ்வொன்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
திமுக எம்பிகள்
இருப்பினும், கடந்த சில நாட்களாகவே திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடந்து வருகிறது. பண்ருட்டி முந்திரி ஆலையில் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்பி ரமேஷ் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரே கொலை வழக்கில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல காவல்கிணறு விலக்கில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் என்பவர் தி.மு.க எம்.பி ஞானதிரவியமும் அவரது ஆதரவாளர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆளுநருடன் சந்திப்பு
அடுத்தடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சினையில் திமுக எம்பிகள் சிக்குவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார். இதில் தமிழ்நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், வார இறுதி நாட்களில் கோயில்களைத் திறப்பது குறித்து ஆளுநரிடம் அண்ணாமலை பேசியதாக ஆளுநர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மூத்த நிர்வாகிகள்
இந்தச் சந்திப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷனன், மூத்த தலைவர் ஹெச் ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிலையில், இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "மூத்த தலைவர்களுடன் இன்று மேதகு ஆளுநர் திரு.ரவி அவர்களை நேரில் சந்தித்தேன்!
திமுக எம்பிகளுக்கு எதிரான வழக்கு
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளைக் கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேதகு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.