திடீரென நாளை லண்டன் செல்லும் அண்ணாமலை! 6 நாள் பயணமாமே! ஓ இதுதான் காரணமா? பரபர பின்னணி
சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென 6 நாள் பயணமாக நாளை லண்டன் புறப்பட்டு செல்ல உள்ளார். இந்த நிலையில் பயணத்தின் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று மாநிலத்தை ஆளும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தான் செல்லும் மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அதுபற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அண்ணாமலையும் பேசினார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது அண்ணாமலை 6 நாள் பயணமாக நாளை லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்றார். தனது Fellowship படிப்பு காரணங்களுக்காக அப்போது அமெரிக்கா சென்ற அவர் 2 வாரம் அங்கு தங்கியிருந்தார். அவருடன் பாஜகவின் செயலாளர் எஸ்ஜி சூர்யாவும் சென்றிருந்தார். இந்த அமெரிக்க பயணம் என்பது அண்ணாமலையின் தனிப்பட்ட பயணமாக அமைந்து இருந்தது.
அதன்பிறகு அண்ணாமலை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றார். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிதி உதவியோடு புதிதாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இதனை அவர்களிடம் அர்ப்பணிக்கும் நிகழ்வுக்காக அண்ணாமலை அரசு முறை பயணமாக இலங்கை சென்று திரும்பி வந்தார்.
இந்நிலையில் தான் தற்போது அண்ணாமலை லண்டனுக்கு திடீரென செல்லும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 6 நாள் பயணமாக நாளை லண்டன் புறப்பட்டு செல்கிறார் அண்ணாமலை. இதுபற்றி விசாரித்தபோது முக்கிய தகவல் ஒன்று வெளியானது. அதாவது இந்தியாவில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.
அதேபோல் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து அண்ணாமலை பேச உள்ளாராம். இதற்காக தான் அண்ணாமலை நாளை லண்டன் புறப்பட்டு செல்ல இருக்கிறார். மேலும் இந்த பயணம் என்பது அவரது தனிப்பட்ட பயணம் என்று இல்லாமல் கட்சி சார்ந்த பயணமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications