சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைவுச் சீட்டு முறையை ஒழித்து இ பாஸ் அறிமுகப்படுத்த பாஜக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு இ-பாஸ் நடைமுறையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தி உள்ளார். மேலும் நீதிமன்றங்கள் வாயிலாக ஆறு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு தற்காலிக நுழைவு சீட்டு பாஸ் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தலாம் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக வரக்கூடிய பொதுமக்களுக்கு ஆன்லைன் இ-பாஸ் முறையை வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க மாநில சட்ட அமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.

madras high court bjp

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக வரக்கூடிய பொதுமக்கள் தற்போது உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு வழங்கும் அலுவலகத்தில் வழக்கு விசாரணைக்கு வரக்கூடிய பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உயர்நீதிமன்ற வளாகம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் மற்றும் குடும்ப நல நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணையில் பங்கு கொள்கின்றனர்.

சிறிது காலத்திற்கு முன்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட நுழைவு சீட்டு வழங்கும் அலுவலகம் தற்போது மாற்றப்பட்டு அருகில் ஒரு சிறிய அலுவலகத்தில் நுழைவு சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளுக்காக சென்னை மற்றும் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொது மக்கள் உரிய நேரத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லும் நுழைவு சீட்டு பெற முடியாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

madras high court bjp

குறிப்பாக உடல் ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள், கை குழந்தைகளோடு வரக்கூடிய பெண்கள், முதியவர்கள் நுழைவு சீட்டு பெறுவதில் தற்போது உள்ள நடைமுறை சரியான முறையில் திட்டமிடப் படாததாலும், நுழைவு சீட்டு வழங்கக்கூடிய ஊழியர்கள் குறைவாக உள்ளதாலும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, உரிய நேரத்தில் தங்கள் வழக்குகளின் விசாரணையில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.

மேலும் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு ஒரு அலுவலகமும், உரிமையில் நீதிமன்றங்கள் குடும்பநல நீதிமன்றங்கள் சிவில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்காக வருபவர்களுக்கு வேறு இடங்களிலும் நுழைவுச்சீட்டு சீட்டு வழங்கப்படுவதால் இது குறித்து உயர்நீதிமன்ற வளாகத்தில் சரியான முறையில் அறிவிப்பு பலகை அமைக்கப்படாததாலும் மக்கள் தங்கள் அறியாமையால் வெவ்வேறு இடங்களில் நீண்ட நேரம் நின்று, மறுபடியும் மற்றொரு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருக்கும் வகையில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக தங்களுடைய நியாயத்திற்காகவும், தங்களுடைய உரிமைகளுக்காகவும் போராடும் கிராமப்புற ஏழை நடுத்தர குடும்ப மக்கள், கல்வி அறிவு இல்லாத அப்பாவி மக்கள் மிகவும் கஷ்டங்களையும் வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி அனைத்து மக்களின் வாழ்க்கையிலும், உரிமையிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து துணிவுடன் தங்கள் உரிமையை நிலைநாட்டும் வகையில், சாமானிய மக்களின் உயிர் நாடியாக, ஒளிவிளக்காக மாட்சிமை பொருந்திய சென்னை உயர்நீதிமன்றம்
அரும் பங்காற்றி வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு பெரும் நம்பிக்கையுடன் வரும் மக்களின் துயர் துடைக்க வேண்டிய கடமை தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சருக்கு உள்ளது. எனவே தற்போது உயர் நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்படக்கூடிய அனுமதி சீட்டு நடைமுறையை மாற்றி வழக்கு எண், ஆதார் கார்டு உள்ளிட்ட அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டைகளை இணைத்து ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு வழங்குவதற்கு உரிய நிதியை ஒதுக்கி, இ-பாஸ் முறையை கொண்டு வந்தால் மக்கள் வரிசையில் நின்று துன்பப்படாமல், குறித்த நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளில் விசாரணைக்கு கலந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

மேலும் தற்போது இந்தியா முழுவதுமே "பார் கோட் ஸ்கேனிங் சிஸ்டம்" அனைத்து அலுவலகங்களின் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக உயர்நீதிமன்ற வளாகத்திலும் மாநில சட்ட அமைச்சர் திட்டமிட்டு, ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கி, வழக்கு தொடுத்துள்ள பொதுமக்களின் அடையாள அட்டையுடன், பார் கோட் சிஸ்டத்தையும் இணைத்து எளிய முறையில் மக்களுக்கு நீதிமன்றங்களில் தங்கள் வழக்குகளில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள ஏதுவாக எளிய முறையில் நுழைவுச்சீட்டு வழங்கும் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.

மேலும் குடும்ப நல நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், சிவில் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணைக்காக வரக்கூடிய பொதுமக்களுக்கு, அந்தந்த நீதிமன்றங்கள் வாயிலாக ஆறு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு தற்காலிக நுழைவு சீட்டு பாஸ் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தினால் இன்னும் எளிதாக இருக்கும்.

முக்கியமாக, கல்வி அறிவு பெறாத நீதிமன்ற வழக்குகளில் விசாரணைக்காக வரும் அப்பாவி மக்களுக்கு தங்களுடைய வழக்கு விவரம், நுழைவு சீட்டு உள்ளிட்ட, நீதிமன்ற அலுவல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விழிப்புணர்வு பெருவகையில் நம்பிக்கையுடன் தங்களுடைய வழக்குகளை கையாளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் வகையில், ஒரு சிலருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்கி, சட்டமும், சட்டத்தின் தூணாக விளங்கும் நீதிமன்றங்களும் நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் மக்களுக்கான தகவல் தொடர்பு மையம் ஏற்படுத்த வேண்டும்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உடனடியாக தலையிட்டு நீதிமன்றங்களில் வரும் பொது மக்களின் குறைகளை போக்க, போதிய நிதியை உடனடியாக ஒதுக்கி, இ-பாஸ் நடைமுறை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+