நயினாரை வதக்கி எடுக்கும் வார் ரூம்.. அண்ணாமலை தான் காரணமா? அமைதியான அதிமுக.. பரபர பாலிடிக்ஸ்!
சென்னை: பரபரப்பாக இருக்கிறது தமிழக பாஜக. அதிமுகவினரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யக் கூடாது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜகவுக்காக யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என வெளிப்படையாகவே நயினார் நாகேந்திரனை சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை புறக்கணிக்கப்படுவதாக கூறி ஒருமையிலேயே கூட சிலர் பேசத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜகவில் இணைந்த புதிதிலேயே துணைத்தலைவராகவும் பிறகு மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. 2021 சட்டமன்ற தேர்தலை எல்.முருகன் தலைமையில் பாஜக சந்தித்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டு இடைவெளிக்கு பிறகு பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றம் நுழைந்தனர்.
அதற்குப் பிறகு எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி தனது பதவியை ராஜினாமா செய்து, பிறகு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து 'என் மண் என் மக்கள்' யாத்திரை என பல அதிரடி அரசியல் நடவடிக்கைகளால் பேசு பொருளானார் அண்ணாமலை.

குறிப்பாக பரபரப்பான அதிரடியான ஒரு பேச்சு பொது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்சபட்சமாக எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா போன்ற அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் இரண்டாம் கட்ட தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி உடைபடுவதற்கு அண்ணாமலையின் பேச்சு முக்கிய காரணமாக அமைந்தது. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியை மத்திய பாஜக தலைமை விரும்பிய நிலையில் அண்ணாமலையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் அதிமுக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டது.
தொடர்ந்து தலைவர் பதவிக்கு பலரும் போட்டியிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு மிகுந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே அதிமுகவில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக மட்டுமல்லாது திமுக உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகளுடன் நல்ல பழக்கம் கொண்டவர் நாகேந்திரன் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் நாகேந்திரனுக்கு எதிராக பாஜகவினர் சிலரை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுக குறித்தோ, அதிமுக தலைவர்கள் குறித்த சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப கூடாது என பேசி இருந்தார். அதாவது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அவரது பதவி பறிக்கப்பட்ட பின் அதிமுக தலைவர்கள் குறித்தும், பாஜக தலைவர்கள் குறித்தும் விமர்சனம் செய்து வந்தனர். இதுகுறித்து பாஜக தலைமையில் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தான் அந்த கருத்தை நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராகவே வார் ரூம் என்ற பெயரில் அதிக பட்ச விமர்சனம் எழுந்திருக்கிறது. பாஜக வளர்ச்சிக்காக தான் நாங்கள், ஆனால் பாஜகவினர் கிடையாது. மேலும் தொடர் நிகழ்வுகளில் அண்ணாமலை புறக்கணிக்கப்பட்டு வருகிறார், பேனரில் கூட அவரது படம் இல்லை கட்சி பாசத்திற்காக நயினார் நாகேந்திரன் அதிமுகவை விமர்சிக்காமல் இருக்கலாம். ஆனால் மாநில தலைவராக யார் வந்தாலும், பாஜக வளர்ச்சிக்காக நாங்கள் பேசுவோம் என வெளிப்படையாகவே நயினார் நாகேந்திரனை விமர்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே பல தலைவர்கள் வார் ரூம் தாக்குதலால் கட்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது வார் ரூமின் புதிய டார்கெட்டாக நயினார் நாகேந்திரன் மாறி இருக்கிறார். இதற்கிடையே வார் ரூமுக்கு பதிலடி கொடுக்க அவர் தரப்பிலும் புதிதாக ஒரு வார் ரூம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications