முறிந்த கூட்டணி.. டெல்லியில் முகாமிட்ட அண்ணாமலை.. தள்ளிப்போன தமிழக பாஜக ஆலோசனை கூட்டம்
சென்னை: அண்ணாமலை தலைமையில் சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த இருந்த நிலையில் அவர் டெல்லிக்கு சென்றுள்ளதால் ஆலோசனைக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆவார் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறி வருகின்றனர் பாஜகவினர். இதற்காக தங்கள் கூட்டணியில் உள்ள கட்சியினரை தக்க வைக்க போராடி வருகிறது டெல்லி தலைமை.

பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக கூடி பாஜகவிற்கு எதிராக வியூகம் வகுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டது அதிமுக.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என பதில் அளித்திருந்தார். இந்நிலையில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு இடையில் பாஜக தலைமையிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படும் நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு மற்றும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது. அதே போல மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார் அண்ணாமலை.
இந்நிலையில், நாளைய தினம் அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், செவ்வாய்கிழமையன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications