தமிழக பட்ஜெட் 2025: அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை! ஆப்சென்டான செங்கோட்டையன்.. அப்செட்டான எடப்பாடி!
சென்னை: இன்று தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் அதில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று, 2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் நாளான இன்று தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

நாளை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என கூறுகின்றனர் அதிகாரிகள். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விடியல் பேருந்து பயணத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், முதல்வரின் முகவரி, காலை உணவு திட்டம் என பல திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திரலையில் அதிமுக பொது செயலாளரும், தமிழ்நாடு எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்வது, ஆளும் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைப்பது, குறிப்பாக தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அந்த கூட்டத்தை கட்சியின் மிக மூத்த சீனியர்களின் ஒருவரான செங்கோட்டையன் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக சீனியர்களின் மிக முக்கியமானவர் செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியல் செய்து வருபவர். கடந்த சில நாட்களாகவே அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து மோதல் நிலவுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி செங்கோட்டையன் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியின் காரணமாகவே அவர் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. அதற்கு தொடர்ந்து தனி அணி போலவே செங்கோட்டையன் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து எஸ் பி வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே அங்கு வந்த செங்கோட்டையன் மணமக்களை வாழ்த்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்த்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications