10 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள்.. தமிழக பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு!
சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூர், சென்னை ஆலந்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற தீம் உடன் இந்த பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசி வரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழகம் என பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு நடைபோடுகிறது. சமநிலை தவறாமல் தமிழகத்தை வழிநடத்துவோம்." எனத் தெரிவித்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு ரூ.2,150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது. இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்." என அறிவித்தார்.
மேலும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி,
* சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
* சென்னை வேளச்சேரியில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
* ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்டுத்தப்படும்.
* முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ நீளம் சாலை அமைக்கப்படும், இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.
* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
* பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
* அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்
* ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
* பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
* அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.












Click it and Unblock the Notifications