நாளை தமிழ்நாடு பட்ஜெட்.. விசிக வைத்த "அந்த" கோரிக்கை.. எதிர்பார்ப்புகளை பட்டியலிட்ட திருமாவளவன்!
சென்னை: இந்தி படித்தால் வேலை கிடைத்துவிடும் என்ற மாயத்தோற்றத்தை பாஜகவினர் திட்டமிட்டு உருவாக்கி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்தி பேசக் கூடியவர்களும் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவதாக கூறிய அவர், பட்ஜெட் தொடர்பான தனது எதிர்பார்ப்புகளையும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அரசியல் கட்சியில் இடையில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. பாஜக தரப்பில் மும்மொழிக் கொள்கை தேவை என்றும், மற்ற இருமொழிக் கொள்கையே போதும் என்றும் பேசி வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

திருமாவளவன் பேட்டி
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதுதான் இந்திய ஒற்றுமைக்கு ஏற்புடையதாக இருக்கும்.
வேலை கிடைக்குமா?
மும்மொழிக் கொள்கை என்பதை இந்தி பேசாத மாநிலங்களின் மீது திணிப்பது கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால் பாஜகவினர் இந்தியை படித்தால் வேலை கிடைத்துவிடும், உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு
இந்தி பேசக் கூடியவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதே உண்மை. ஒரே தேசம், ஒரே மொழி என்ற நிலை உருவாக்கும் நோக்கத்துடன் பாஜக செய்வதை அம்பலப்படுத்துகிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து தொகுதி சீரமைப்பு குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சி தென்னிந்திய முதல்வர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
விசிக கோரிக்கை
இதனை மத்திய அரசு கட்டாயம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அதற்கான அழுத்தத்தையும் நாம் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு, விசிக சார்பாக பட்டியல் சமூக மக்கள் பதவி உயர்வு பெறுவதற்கான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
இந்த கூட்டத்தொடரில் அதனை சட்டமாக்குவார்கள் என்று நம்புகிறோம். அதேபோல் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்கு கூடுதல் நிதியும், வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும். நன்னிலம் திட்டம் வரவேற்பை பெற்ற போதும், அதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த திட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்கீடு பெற விரும்புவோர் கூட இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications