சீறி வருமா காளைகள்..திறக்குமா வாடி வாசல்? தடை கேட்கும் ‘பீட்டா’! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!
சென்னை : ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
தமிழகத்தின் பாரம்பரியமும், பழம்பெருமையும் வாய்ந்த ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டபோது, ஒட்டு மொத்தத் தமிழக மக்களும் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராடினர்.
தன்னெழுச்சியாக நடந்த இப்போராட்டங்களின் விளைவாக தடை தகர்க்கப்பட்டது. மீண்டும் ஜல்லிக்கட்டு நடந்தது. தை மாதம் பிறக்கப் போகிறது என்றாலே பொங்கல் திருநாளும், ஜல்லிக்கட்டும்தான் தமிழக மக்களின் நினைவுக்கு வரும்.

ஜல்லிகட்டு
விரைவில் வரவிருக்கும் தை மாதப் பிறப்பை முன்னிட்டு, தற்போது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் ஆர்வலர்கள் தங்கள் காளைகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கத் துவங்கிவிட்டனர். கொரோனாவுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது போல் இந்த ஆண்டும் தைப்பொங்கல் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அதற்கான ஆணை கிடைக்குமென எதிர்பார்க்கும் காளை உரிமையாளர்கள் அதற்காக ஜல்லிக்கட்டு காளைகள் தயார்படுத்தும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

காளைகள் தயார்
காளைகளுக்கு நடைப்பயிற்சி, மண் குத்துதல், நீச்சல் பயிற்சி, வடம் போடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. காளைகளுக்கு சிறப்பு உணவாக கடலை மிட்டாய், பாதாம் பருப்பு, தேங்காய் பூ ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு பயிற்சிபெறும் காளைகள் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, புதுக்கோட்டை திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக காளை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

பீட்டா மனு
மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், ஏன் தமிழக மக்களே ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்பார்த்து வரும் நிலையில் தமிழகத்தின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் அதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நவம்பர் 23ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என காளை உரிமையாளர்கள் ஆர்வத்தோடு இருக்கும் நிலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications